என்னங்க இது..புகை பிடிக்கும் போட்டியாம்.. மூச்சு முட்ட பீடி இழுக்கும் சிங்கபெண்கள்..குவியும் கண்டனம்
சென்னை: தமிழகத்தில் ஒரு கிராமத்தில் பெண்கள் புகை பிடிப்பது போன்று விளையாட்டு போட்டி நடத்தப்பட்டதால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதை பார்த்து சிறுவர், சிறுமிகள் கெட்டு போக வாய்ப்புள்ளது என்று பலரும் கூறியுள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
பொங்கல் பண்டிகை என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவது நமது வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள்தான்.

பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்
இதற்கு அடுத்தபடியாக நமது பாரம்பரிய விளையாட்டு போட்டிகள். குக்கிராமத்தில் நமது கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் என களைகட்டும். கிராமங்களில் நடத்தப்படும் சில வேடிக்கையான விளையாட்டு போட்டிகள் மக்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் விதமாக போட்டிகள் இருக்கும்.

முழு பீடியையும் இழுக்க வேண்டும்
தற்போது தமிழகம் முழுவதும் பொங்கல் களைகட்டியுள்ள நிலையில் ஒரு கிராமத்தில் நடத்திய பொங்கல் விளையாட்டு போட்டி சர்ச்சைக்குள்ளானது. பீடியை புகைக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டு. அதாவது போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் வேகமாக முழு பீடியையும் விரைவாக இழுத்து முடித்தால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

சிங்க பெண்கள் செய்யும் வேலையா இது?
ஊர் மக்களின் பலத்த ஆவரவரத்துக்கு மத்தியில் களமிறங்கிய 4 பெண்கள் போட்டி போட்டு பீடியை வேகமாக புகைக்கும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடைசியில் குறைவான அளவுள்ள பீடியை போட்டியை நடத்துபவரிடம் ஒப்படைத்த ஒரு பெண் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த போட்டி எங்கு நடைபெற்றது என்பது தெரியவில்லை.

வீடியோ வைரல்
இது தொடர்பான வீடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் இந்த விபரீதமான விளையாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதை பார்த்து சிறுவர், சிறுமிகள் கெட்டு போக வாய்ப்புள்ளது என்று கூறும் அவரகள் இதுபோன்ற விளையாட்டுகளை அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

குவியும் கண்டனம்
'புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது' என்று அரசும், பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனால் பெண்களே புகை பிடிக்கும்படியான இப்படி கேவலமான ஒரு விளையாட்டு போட்டியை நடத்திய போட்டி நிர்வாகிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விளையாட்டு போட்டி என்பது அடுத்தவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, யாரையும் கெடுப்பதாக இருக்க கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications