கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா- தமிழக பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை!
சென்னை: கொரோனா பரவலை காரணம் காட்டி கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் தமிழக பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன்னார் வளைகுடாவில் உள்ள கச்சத்தீவு தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாகும். தமிழகத்துக்குச் சொந்தமான இந்த கச்சத்தீவு மத்திய அரசால் ஒருதலைபட்சமாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்கு தமிழகம் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தமிழகத்துக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க கோரி வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டாலும் அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்கவும் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தி ஓய்வெடுக்கவும் அனுமதி உண்டு. ஆனால் இலங்கை இதுவரை இந்த சரத்துகளை மதித்து நடந்தது இல்லை.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நடைபெற்ற காலத்தில் கச்சத்தீவு திருவிழாவுக்கு தமிழக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது இல்லை. 2009-ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழக பக்தர்களுக்கு கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா என்பது தமிழகம்- ஈழத் தமிழர்கள் இடையேயான கலாசார திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா மார்ச் 11,12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் இலங்கையை சேர்ந்த 500 பேர் மட்டுமே பங்கேற்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக பக்தர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இது தமிழக பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications