சென்னையில் தங்கி விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டிய இலங்கைப் பெண் - என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை
இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் தங்கி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டியதற்கான ஆவணங்கள் சிக்கியதை தொடர்ந்து அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: போலி பாஸ்போர்ட் வழக்கில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண், விடுதலை புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டி வந்தது தெரியவந்ததையடுத்து, தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள அந்த பெண்ணின் பெயர் மேரி பிரான்சிஸ்கா என்பதாகும். இலங்கையைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்ல விமான நிலையத்திற்கு சென்றார்.
அப்போது அவரது பாஸ்போட்டை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கா இந்திய குடியுரிமை பெற்ற நபர் என்றும், அதற்கான இந்திய அரசின் பாஸ்போர்ட் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
தமிழகம் உட்பட 3 மாநிலங்களில்.. என்ஐஏ அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
அண்ணா நகரில் வீடு
இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் மேரி பிரான்சிஸ்காவை க்யூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியது. விசாரணையில் மேரி பிரான்சிஸ்கா கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலமாக சென்னை வந்துள்ளார். அண்ணாநகரில் லீசுக்கு வீடு ஒன்று எடுத்து தங்கியுள்ளார்.
என்ஐஏ விசாரணை
வீடு லீசுக்கு எடுத்த ஆதாரங்களை வைத்து தங்களது வீடு என்று கூறி இலங்கை குடியுரிமையை மறைத்து இந்தியர் என்று ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுள்ளார். அதை வைத்து இந்திய குடியுரிமை பெற்ற நபர் என்று பாஸ்போர்ட் எடுத்து மோசடி செய்துள்ளார். இதையடுத்து போலி பாஸ்போர்ட் மூலமாக சென்னையில் தங்கி வந்த மேரியை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனைடுத்து மேரியிடம் டெல்லி தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு
விசாரணையில் பல தகவல்கள் வெளியானது. போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதாகியுள்ள இலங்கை பெண் மேரி, தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தோடு தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இவர் மும்பை, பெங்களூர், சென்னை உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்துள்ளார். போலி பாஸ்போர்ட் மூலமாக வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலமாக பயணித்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
விடுதலை புலிகள் இயக்கத்திற்கு நிதி
விடுதலை புலி இயக்கத்திற்காக நிதி திரட்டும் பணியில் மேரி முக்கிய பொறுப்பில் இருந்தவர் என்பதும், பல ஆண்டுகளாக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் போலி ஆவணங்கள் மூலமாக மும்பையிலுள்ள வங்கியிலிருந்து பணத்தை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.
மேரிக்கு உதவிய நால்வர் எங்கே?
மேரிக்கு உதவியாக கெனிஸ்டன் பெர்னாண்டோ, கே.பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், செல்லமுத்து ஆகியோர் செயல்பட்டு வந்ததாகவும் கூறியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நால்வரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இருந்து வந்து போலிபாஸ்போர்ட் மூலம் சென்னை வந்த பெண் வீடு லீசுக்கு எடுத்து தங்கி இந்திய குடி உரிமை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.