"நீயே ஒரு பெரிய பிராடு.. என்கிட்ட நிறைய செருப்பும் இருக்கு.." விஷாலுக்கு ஸ்ரீரெட்டி காட்டமான பதிலடி
சென்னை: சினாமாவில் வாய்ப்பு தருகிறோம் எனச் சொல்லி பெண்களைப் பயன்படுத்திக் கொள்ள நினைப்போரைச் செருப்பால் அடிக்க வேண்டும் என விஷால் கூறியிருந்த நிலையில், இதற்கு ஸ்ரீ ரெட்டி காட்டமாக சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். விஷால் பெயரை ஸ்ரீ ரெட்டி நேரடியாகக் குறிப்பிடவில்லை என்ற போதிலும் அவர் விஷாலையே இதுபோல மறைமுகமாகச் சாடுவதாக நெட்டிசன்கள் கருத்துச் சொல்லி வருகிறார்கள்.
சினிமா துறை பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாத துறை என்ற பேச்சு பல காலமாக இருக்கிறது. சமீப காலமாகவே இந்தப் பேச்சு சற்று குறைந்திருந்தது. ஆனால், சமீபத்தில் மலையாள சினிமா குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

மலையாள சினிமாவில் பெண்களுக்கு நடக்கும் அத்துமீறல் குறித்து அந்த ஹேமா கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து பல நடிகைகள் இது குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.
விஷால்: இதற்கிடையே நடிகர் சங்கத் தலைவராக உள்ள விஷால் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பெண்களைத் தவறாகப் பயன்படுத்த நினைப்பவர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்ற அவர், கேரளாவைப் போலத் தமிழகத்திலும் குழு அமைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சினிமா வாய்ப்புக்காக ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எவனோ ஒருத்தன் கூப்பிடுவான்... பெண்ணை மதிக்காமல் அவங்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சி பண்ணுவாங்க.. இதை எல்லாம் தவிர்க்க ஒரே வழி தான் இருக்கு.. அந்தப் பெண்ணிற்கு மன தைரியம் வேணும். இது போல கேட்கும் நபர்களைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்பதே எனது கருத்து" என்றார்.
ஸ்ரீ ரெட்டி: இதற்கிடையே விஷாலின் கருத்துக்குப் பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். விஷால் பெயரை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்ற போதிலும் அவரை விஷாலையே சொல்வதாக இணையத்தில் பலரும் கருத்துச் சொல்லி வருகிறார்கள். இது தொடர்பாக ஸ்ரீ ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "mr.womaniser & வெள்ளை முடி கொண்ட வயதான அங்கிளுக்கு வணக்கம்.. நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றி ஊடகங்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
காட்டம்: ஒரு பெண்ணை பற்றி நீ இழிவாகப் பேசுவது, உனக்கு இருக்கும் உடல் நடுக்கம், உன்னைச் சுற்றி இருக்கும் நல்லவர்களிடம் எல்லாம் நீ பிரச்சினை செய்வது எல்லாமே அனைவருக்கும் தெரியும் .. நீயே ஒரு பிராடு.. உலகத்திற்கே தெரியும் நீ எவ்வளவு பெரிய பிராடு என்று.. அப்படியிருக்கும் போது ஊடகத்தில் பேசும் போது ஏதேதோ சொல்லி நீ நல்லவன் போலக் காட்டிக் கொள்ளாதே..
கர்மா: நீ ஒரு பைத்தியம் என்பதை ஏற்கனவே பலமுறை நிரூபித்துவிட்டாய்.. உன் வாழ்வில் இருந்த ஒவ்வொரு பெண்ணும் ஏன் உன்னை விட்டு சென்றாள்? உனது நிச்சயதார்த்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது?? தயவு செய்து அடுத்த முறை இந்த கேள்விக்குப் பதில் சொல்லு.. நீ ஒரு சங்கத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறாய்.. கொஞ்சமாவது கண்ணியமாக இரு.. கர்மா உன்னை வைத்துச் செய்கிறது.. என்னிடம் நிறையச் செருப்பு உள்ளது. உனக்கு ஒன்று வேண்டுமா?" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த ட்வீட் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. முன்னதாக இதே ஸ்ரீ ரெட்டி தான் விஷாலுக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications