கோயம்பேடு போலீசார் தலையில் 14 லட்சத்தை எழுதிய நபர்.. விசாரித்தால் மிகப்பெரிய ட்விஸ்ட்
சென்னை: சென்னை பெரிய மேட்டில் வசிக்கும் வேலூரைச் சேர்ந்த தன்வீர் அகமது என்பவர் தனது உதவியாளரான முகமது தன்ஜீர் எனபவரிடம் 14 லட்சம் பணத்தை கோயம்பேடு வியாபாரிகளிடம் வசூலித்து வருமாறு கூறியிருக்கிறார். அதன்படி உதவியாளரும் பணத்தை வாங்கி கொண்டு வந்துள்ளார். வரும் வழியில் வாகன சோதனையின்போது ரூ.14 லட்சத்தை போலீசார் பறித்துச் சென்றதாக நாடகமாடியிருக்கிறார். அவர் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
பொதுவாக தேர்தல் நடத்தை விதிமுறை இருக்கும் காலங்களில் அதிகப்படியான ரொக்கம் இருந்தால், அதாவது 50 ஆயிரத்திற்கு மேல் உள்ள பணத்திற்கு பில் அல்லது உரிய ஆவணங்கள் இல்லை என்றால் அதனை பறிமுதல் செய்வார்கள் போலீசார். இறுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இது பொதுவான நடைமுறை.. ஆனால் தேர்தல் முடிந்த உடன் இந்த நடத்தை விதிமுறை மட்டும் இருக்காது. இந்நிலையில் சென்னையில் வாகன சோதனையின் போது 14 லட்சத்தை போலீசார் பறித்து சென்றதாக ஒருவர் பதுக்கியுள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதாகும் தன்வீர் அகமது என்பவர் சென்னை பெரியமேடு பகுதியில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது உதவியாளர் முகமது தன்ஜீருக்கு 25 வயது ஆகிறது. இவர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் வசூலான ரூ.14 லட்சத்தை வாங்கிக்கொண்டு ஆட்டோவில் பெரியமேடு நோக்கிச் சென்றுள்ளார்.
நெற்குன்றம் அருகே சென்றபோது சீருடையில் வாகன சோதனையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஆட்டோவை வழி மறித்து தன்னிடம் இருந்த ரூ.14 லட்சம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு, போலீஸ் நிலையத்தில் உரிய ஆவணத்தைக் காட்டி வாங்கிச்செல்லும்படி கூறியதாக முகமது தன்ஜீ தனது நிறுவன உரிமையாளரான தன்வீர் அகமதுவிடம் தெரிவித்தார்.
இதுபற்றி கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் கேட்டபோது அதுபோல் போலீசார் யாரும் வாகன சோதனையில் ஈடுபடவில்லை என்பது தன்வீர் அகமதுவுக்கு தெரியவந்தது. இது குறித்து தன்வீர் அஹமது அளித்த புகாரின்பேரில் போலீசார், மர்மநபர்கள் போலீஸ் போல் நடித்து பணத்தைப் பறித்துச் சென்றனரா? அல்லது முகமது தன்ஜீர் நாடகமாடுகிறாரா? என்ற கோணத்தில் விசாரித்தனர்.
இது தொடர்பாகச் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கோயம்பேடு போலீசார் ஆய்வு செய்தனர். அதில் போக்குவரத்து போலீசார் யாரும் அங்கு வாகன சோதனையில் ஈடுபடவில்லை என்பது உறுதியானது. இதனால் முகமது தன்ஜீரிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், முகமது தன்ஜீருக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. எனவே அந்தப் பணத்தைத் தானே எடுத்துக்கொண்டு, போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது பணம், செல்போனை பறித்துக்கொண்டதாகக் கூறி நாடகமாடியதும், அந்தப் பணத்தைப் பொன்னேரியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. முகமது தன்ஜீரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.14 லட்சத்தையும் பறிமுதல் செய்தார்கள்.














Click it and Unblock the Notifications