“கர்ச்சீப் வைத்து மூடிக்கொண்டு போவதுதான் கேவலம்” - எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி
சென்னை: "காரில் போகும்போது கிரிக்கெட் பார்த்தது தப்பு என பழனிசாமி சொல்லிருக்காரு.. காரில் நீங்க கர்ச்சீப் வைத்து முகத்தை மூடிட்டு போனீங்களே.. அதுதான் கேவலம்" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று ஓசூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.

திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "தமிழக உரிமைகளை திமுக மட்டும்தான் காக்க முடியும் என நிரூபித்துவிட்டு கெத்தாக வந்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்துவிட்டு கிருஷ்ணகிரிக்கு நான் வந்திருக்கிறேன். அன்புச் சகோதரர் ராகுல் காந்தி நேற்று தமிழகத்தில் பிரசாரம் செய்துவிட்டு சென்றிருக்கிறார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை மோடியால் கன்ட்ரோல் செய்ய முடியாது என ராகுல் காந்தி சொன்னார். நாளை நான் சென்னையில் பிரசாரம் செய்கிறேன். ராகுல் குமரியில் பிரசாரம் செய்யவுள்ளார்.
ஒரு காலத்தில் சிறிய தொழில் நகரமாக அறியப்பட்ட ஓசூர் நவீன தொழில் மையமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 43,000 தொழிற்சாலைகள் உள்ளன. ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திமுக அரசின் முயற்சிக்கு மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது. இதைக்கூட தட்டிக்கேட்க முடியாமல் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டு உரிமைக்காக பாஜகவிடம் குரல் கொடுக்க முடியாத பழனிசாமி என்னைப் பார்த்து கேள்வி கேட்கிறார். காரில் செல்லும்போது கிரிக்கெட் பார்த்தது தவறாம்.
காரில் போகும்போது முகத்தை மூடியதுதான் கேவலம். முதல்வர் கிரிக்கெட் பார்க்கலாமா என கேட்கிறார். முதல்வர் கிரிக்கெட் பார்ப்பது தவறு கிடையாது. முதல்வராக இருந்துகிட்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துதான் தெரிஞ்சிக்கிட்டேன் என சொன்னதுதான் மிகப்பெரிய கேவலம்.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் திட்டங்களை கொடுத்துள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்காக குரல் கொடுக்க முடியாதவர் எடப்பாடி பழனிசாமி. அடுத்த 5 ஆண்டுகளில் 35 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கப்படும். நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி அடைந்த பதற்றத்தில் பேசி கொண்டிருக்கிறார் மோடி.
தொலைக்காட்சியில் நேற்றிரவு மோடி பேசியிருக்கிறார். அதை பிரதமர் மோடியின் உரை என சொல்வதைவிட பாஜக தலைவர் மோடியின் அரசியல் உரை என்றுதான் சொல்லனும். தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்போது தேசியக் கொடி பின்னணியில் வார்த்தைக்கு வார்த்தை எதிர்க்கட்சிகளை திட்டிப் பேசியிருக்கிறார். தேர்தல் கூட்டங்களில் பேசுவதையெல்லாம் அரசு சார்பான உரையில் பேசியிருக்கிறார். இது அப்பட்டமான விதி மீறல்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications