மைத்துனர் மகன் திருமணம்! நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்! உறவுகள் ஒன்றுகூடல்!
சென்னை: துர்கா ஸ்டாலினின் சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அப்போலோ மருத்துவமனையில் ரொட்டின் செக் அப் செய்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி 2 நாட்கள் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் தனது மைத்துனர் இல்ல மணவிழாவில் உற்சாகமாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு சாருமதி, ஜெயந்தி, என இரண்டு சகோதரிகளும் ராஜமூர்த்தி என ஒரு சகோதரர் உள்ளனர். தனது சகோதரர் மீதும் சகோதரிகள் இருவர் மீதும் துர்கா ஸ்டாலின் அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பவர். இந்நிலையில் சாருமதி அண்மையில் காலமான நிலையில், ஜெயந்தியும், ராஜமூர்த்தியும் தங்களது அக்கா துர்கா ஸ்டாலின் மீது பற்றும் மரியாதையும் கொண்டிருக்கிறார்கள்.
துர்கா ஸ்டாலினின் தம்பி ராஜமூர்த்தியை பொறுத்தவரை இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளின் இயக்குநராக உள்ளார். மேலும், இவர் பட்டிமன்ற பேச்சாளரும் கூட. சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக்கூடியவர். தனது மாமா ஸ்டாலின் முதலமைச்சராக இருப்பினும், யாரிடமும் அரசியல் பற்றி பேசாதவர்.
இவரது மகன் சாரங்கராஜன் என்ற சஞ்சய்க்கும் கீர்த்தனாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் அதற்கான வரவேற்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் கலந்துகொண்டார். இந்த திருமண விழாவில் முதலமைச்சருடன் அமைச்சர் எ.வ.வேலு மட்டும் சென்றிருந்தார். மற்றபடி வேறு எந்த அமைச்சரையும் பார்க்க முடியவில்லை.
அதே நேரத்தில் கவிஞர் வைரமுத்து உட்பட சொற்பொழிவாளர்கள், இலக்கியவாதிகள், என பலரும் திருமண வரவேற்பு விழாவுக்கு வந்திருந்தனர். அரசியல் பிரமுகர்களை அழைப்பதை ராஜமூர்த்தி தவிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications