நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்கள்! தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் நிவாரணம் அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின்.
சென்னை: சிவகங்கை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறார்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த நிவாரணம் வழங்கப்படுவதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், வாராப்பூர் உள்வட்டம், 03-உலகம்பட்டி குரூப் படமிஞ்சி கிராமத்தில் உள்ள செட்டி ஊருணியில் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி த/பெ. நாகராஜ் (வயது 10), மகேந்திரன் த/பெ. (லேட்) லெட்சுமணன் (வயது 07), மற்றும் சந்தோஷ் த/பெ. (லேட்) லெட்சுமணன் (வயது 05) ஆகிய மூன்று சிறார்களும் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இதேபோல், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், மேலையூர் சரகம் மற்றும் கிராமம் ஐயர் காலனியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் அபினேஷ் த/பெ.மகேந்திரன் (வயது 16) என்பவர் அதே தெருவின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் வளர்ப்பு குட்டைக்கு குளிக்க சென்ற பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்ற துயரச் செய்தினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
உயிரிழந்த நான்கு சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.












Click it and Unblock the Notifications