“சொல்லிக் கொடுத்து பேசுறீங்களா?” முதல்வர் ஸ்டாலினை ஆச்சரியப்படுத்திய ராதிகா.. யார் இவர்?
சென்னை: பல லட்சம் மக்கள் ஆவலுடன் காத்திருந்த 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட'த்தை வெகு விமர்சையாக தர்மபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெற்றிகரமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்திருக்கிறார்.
இந்நிகழ்ச்சி, வழக்கமான ஒரு அரசு விழாவைப்போல் அல்லாமல் முதல்வர் ஸ்டாலினே நேரடியாகப் பயனாளிகளைச் சந்தித்தார். அவர்களிடம் படிவங்களைப் பெற்றார். அதைச் சரிபார்த்தார். சில விளக்கங்களைக் கேட்டார்.
இப்படி 'லைவ்' ஆக அரங்கேறியது அந்த தொடக்க விழா.

முதல்வர் ஸ்டாலின் ஒரு பெண் பயனாளியிடம், 'இது என்ன திட்டம் தெரியுமா உங்களுக்கு?' என்று கேட்க, அந்தப் பயனாளி சற்றும் தடுமாறாமல், 'மகளிர் உரிமைத் திட்டம்' என்று பதில் கொடுத்தார்.
அதற்கு மறுமொழியாக ஸ்டாலின், "தேர்தல் நேரத்தில் அறிவித்திருந்தோம். இப்போது அதை வழங்குகிறோம். அரசு வழங்கும் இந்த ஆயிரம் ரூபாய் உங்களுக்குத் திருப்தியாக இருக்குமா? எதற்காக இந்தப் பணத்தைச் செலவு செய்வீர்கள்?' என்று கேட்டார்.
சற்று தாமதிக்காமல் அந்தப் பயனாளி, "குழந்தைகளின் படிப்பு செலவுக்குப் பயன்படுத்துவோம்" என்றார். அப்போது முதல்வர் விடவில்லை. "அரசாங்கத்தின் மீது ஏதாவது குறைகள் உள்ளதா? ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்று கலகலப்பாகக் கேட்க, பயனாளி "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அய்யா" என்றார்.

இந்தப் பயனாளியைச் சந்தித்துப் பேசியதைப் போலவே, அவர் ஒரு தனி அரங்கிலிருந்த சுய உதவிக்குழுப் பெண்கள், சாமானிய பெண்கள் எனப் பலரிடம் பேசினார். அப்போது ராதிகா வெங்கடேசன் என்ற பயனாளி தங்கு தடை இல்லாமல் சில விஷங்களை முதல்வரிடம் கூறினார்.
அவரது பேச்சைக் கேட்டு அசந்து போன முதல்வர் ஸ்டாலின், 'நீங்களே பேசுகிறீர்களா? அல்லது யாராவது சொல்லிக் கொடுத்துப் பேசுகிறீர்களா?' என்றார்.
அதற்குப் பிறகு அனைத்து ஊடகங்களிலும் முதல்வர் கேட்ட கேள்விதான் தலைப்புச் செய்தியாக மாறியது.
பயனாளியாகக் கூட்டத்தில் கலந்துகொண்டது யார்? உண்மையில் யாராவது சொல்லிக் கொடுத்துப் பேசினாரா? இல்லை சுயமாகவே பேசினாரா? எனப் பல கேள்விகளுடன் அவரைத் தொடர்பு கொண்டோம்.

பயம் காரணமாக முதல்வர் ஸ்டாலின் முன்னால் அவர் எதை எல்லாம் பேச மறந்துபோனாரோ அதை எல்லாம் கடகடவென்று நம்மிடம் கொட்டினார் இந்தப் பயனாளி ராதிகா வெங்கடேசன்.
"முதல்வர் ஸ்டாலினை நேரில் நான் சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை. அந்த வாய்ப்பை நான் அபூர்வமான நிகழ்வாகத்தான் நினைக்கிறேன். ஏனென்றால், நாங்கள் அடித்தட்டு மக்கள். வசதி வாய்ப்பு எல்லாம் பெரியதாகச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.
நான் படிக்கும் காலத்தில் இன்றைக்கு உள்ளதைப் போன்ற 'புதுமைப் பெண்' திட்டம் எல்லாம் இல்லை. அன்றைக்கு எனக்கு இதைப்போன்று ஒரு ஊக்கத்தொகை கிடைத்திருந்தால், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நல்ல வேலையிலிருந்திருப்பேன். ஆனால், அந்த வாய்ப்பு என் தலைமுறை பெண்களுக்குக் கிடக்கவில்லை.

இன்றைக்குக் கல்லூரி படிக்கும் மாணவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றார் முதல்வர் ஸ்டாலின். அது பெண் பிள்ளைகள் உயர்படிப்பில் சேருவதற்குப் பெரிய வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறது. பெண் பிள்ளைகள் அதிக அளவில் உயர்கல்வியில் சேர்கிறார்கள். அதற்கு அவரது 'புதுமைப் பெண்' திட்டம்தான் காரணம்.
இன்றைக்கு மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தை எங்கள் ஊரில் தொடங்கி வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தத் தொகை பல பெண்களின் முன்னேற்றத்திற்கு நிச்சயம் உதவும். பலர் தனது பிள்ளைகளின் கல்விச் செலவுக்காகப் பயன்படுத்தலாம்.
அல்லது குடும்பச் செலவுக்குப் பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால், தங்களின் சேமிப்பு தொகைக்குக்கூடப் பயன்படுத்தலாம். எப்படிப் பயன்படுத்தினாலும், இந்த ஆயிரம் ரூபாய் மிகமிகத் தேவையானது. இதனால் தமிழ்நாடு உயர்ந்த பாதைக்குச் செல்லும். வளர்ச்சிகள் நிச்சயமாகப் பெருகும்.
உதாரணமாகச் சொல்கிறேன். எனக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள். அவள் இப்போது பத்தாம் வகுப்பு படித்துவருகிறாள். அவளது உயர்படிப்புக்காக நான் மாதம் 500 ரூபாய் போஸ்ட் ஆபீசில் சேமிப்புக் கணக்கில் போட்டு வருகிறேன்.
இந்தத் தொகைக் கிடைத்தால், மேலும் ஒரு 500 ரூபாய் கூடுதலாகச் சேமிப்பேன். நாளை அந்தப் பணம் எனது மகளின் உயர்கல்விக்குக் கட்டாயம் உதவும். அப்படித்தான் இந்தத் திட்டத்தினை நான் பார்க்கிறேன்.

சிலர் நான் பேசிவதைக் கேட்டுவிட்டு, யாரோ சொல்லிக் கொடுத்துப் பேசுவதாக நினைக்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை. நான் ஒவ்வொரு வார்த்தையையும் உள்ளத்திலிருந்து சொல்கிறேன்" என்கிறார்
அவரிடம் இந்த ஆயிரம் ரூபாய் என்பது ஒரு தொகையே இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், இந்தப் பணம் பெரிய உதவியாக இருக்கும் என்கிறீர்கள்? உங்களைப் பகுதியில் உள்ள பயனாளிகள் இத்திட்டத்தைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள்? என்றோம்.
அதற்கு அவர், "இரண்டு விதமான வேலைகள் இருக்கின்றன. உடல் உழைப்பை அதிகம் செலுத்தினால் 100 ரூபாய் சம்பாதித்து, அதை வைத்து மகிழ்ச்சி அடைகின்றவர்கள் இருக்கிறார்கள். நான் சொல்வதைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சிலர் உடல் உழைப்பே செய்யாமல் ஒரு நொடியில் 100 ரூபாய் சம்பாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.
நாங்கள் உடல் உழைப்பை அதிகம் செலுத்தி 100 ரூ சம்பாதிக்கும் வர்க்கம். ஆகவே, அரசு தரும் இந்த ஆயிரம் ரூபாய் பெரிதாக உள்ளது. சிலருக்கு அது ஒரு தொகையாகத் தெரியவில்லை.
உதாரணமாகச் சொன்னால், வீட்டில் யார் உதவியும் கிடைக்காமல் ஒரு மூதாட்டி இருக்கிறார். அவருக்கு மருத்து வாங்கப் பணம் தேவை. இந்த 1000 கிடைத்தால், அவர் யாரையும் எதிர்ப்பாக்கத் தேவையில்லை. அவரது உடலை அவரே காப்பாற்றிக் கொள்வார். அவருக்குத்தான் இதன் வலி புரியும்.
ஒரு நொடியில் ஒரு பொருள் வாங்க ஆயிரம் செலவழிப்பவர்களுக்கு இது ஒரு தொகையா என்று தோன்றும். அடித்தட்டு மக்களின் வலியை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
ஆகவே அப்படிப் பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் எங்கள் வலியைப் புரிந்து கொண்டுதான் இத்திட்டத்தால் உதவ முன்வந்திருக்கிறார்.

நான் ஹோட்டல் கடையில் வேலை செய்திருக்கிறேன். துணிக்கடையில் வேலை செய்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்தே கடுமையாக உழைத்திருக்கிறேன். ஒரு 100 ரூபாய்க்காக நிறையக் கஷ்டங்களைப் பட்டுள்ளேன்.
இத்தனை கஷ்டங்களையும் தாண்டி, இன்று கடன் வாங்கி தொழில் ஆரம்பித்திருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கடன் தொகையைக் கட்டி வருகிறேன். என் தேவைக்கு நான் இன்னும் வாங்கலாம். ஆனால், அந்தப் பணம் கடன்தான். இன்று முதல்வர் வழங்க இருக்கின்ற 1000 ரூபாய் என்பது என் உரிமைத் தொகை. அதை நான் திரும்பக் கட்டத் தேவையில்லை.
கூடிப் பழகும் உறவினர்களே கஷ்டம் என்று வந்தால், உதவாமல் விலகிச் சென்றுவிடுகிறார்கள். அப்படியான காலத்தில் அரசாங்கம் எங்கள் கஷ்டத்தை உணர்ந்து உதவி செய்கிறது. அதை உணர்ந்ததால்தான், முதல்வரிடம் மனம் விட்டுப் பேசினேன்" என்கிறார்.
அரசின் மகளிர் உரிமைத் திட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், ராதிகா இடத்திலிருந்து யோசிக்க வேண்டும்!












Click it and Unblock the Notifications