பள்ளிகள் திறப்பு... எடுத்தேன் -கவிழ்த்தேன் என முடிவெடுக்காதீர்... தமிழக அரசுக்கு ஸ்டாலின் அட்வைஸ்..!
சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி திறப்பு விவகாரத்தில் எடுத்தேன் -கவிழ்த்தேன் என தமிழக அரசு முடிவெடுக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ் செய்துள்ளார்.
மாணவச் செல்வங்களின் உயிர்ப் பாதுகாப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை முதலமைச்சருக்கு நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கல்லூரிகள் திறப்பு
9 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 16-ஆம் தேதி திறக்கப்படும்" என்றும்; அனைத்துக் கல்லூரிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் நவம்பர் 16 முதல் திறந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்றும்; முதலமைச்சர் திரு பழனிசாமி அவசர கோலத்தில் அறிவித்திருக்கிறார். மாணவ - மாணவியரின் பாதுகாப்பினை முழுமையாக ஆய்வு செய்த பிறகு எடுக்கப்பட்ட முடிவாக இது தெரியவில்லை.

பெற்றோர் அச்சம்
அறிவிப்பினைக் கண்டதிலிருந்து பெற்றோர்கள்- ஆசிரியர்கள் அனைவருமே பள்ளிகள் - கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வது, விடுதி மாணவர்களுக்கான தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடுகளுக்கான எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பை எந்த வகையில் மேற்கொள்வது என்பது குறித்த அச்சத்திலும், பதற்றத்திலும் தவிப்பதைக் காண முடிகிறது.

கடும் கண்டனம்
அதிலும் குறிப்பாக- "கொரோனாவின் இரண்டாவது அலை வீசும்" என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரித்து- இது போன்ற தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் உள்ளாகி அடுத்தடுத்து ஊரடங்கினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில்- தமிழகத்தில் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி பள்ளிகள் - கல்லூரிகளைத் திறக்க வேண்டுமா என்ற நியாயமான கேள்வி எல்லாத் தரப்பிலும் எழுந்திருப்பதை முதலமைச்சர் திரு. பழனிசாமி உணராமல் இருப்பது கண்டனத்திற்குரியது.

ஆய்வுக்கூட்டம்
முதலமைச்சர் திரு பழனிசாமி - ஆய்வு என்ற பெயரில் கூட்டம் போடுகிறாரே தவிர- இந்தக் காலக்கட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறப்பதில் இருக்கும் பாதகத்தைப் பற்றியும், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உள்ள சங்கடத்தைப் பற்றியும் கருத்தில் கொண்டு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

அரசுக்கு யோசனை
மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவருமே, "நவம்பருக்குப் பதில் பொங்கல் விடுமுறை முடிந்து, 2021 ஜனவரி இறுதியில், அப்போதிருக்கும் சூழ்நிலைகளை முழுவதுமாக ஆய்வு செய்து, பள்ளிகளைத் திறக்கலாம்" என்ற கருத்தை முன் வைக்கிறார்கள். பத்திரிக்கைகளிலும் அந்தச் செய்திகள் வெளிவருகிறது. உலக சுகாதார நிறுவனம் போன்றவற்றின் ஆய்வறிக்கைகளும் எச்சரிக்கின்றன. இவற்றை எல்லாம் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னால் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல், ஒதுக்கித் தள்ளிட இயலவில்லை.











Click it and Unblock the Notifications