முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்.. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த அடுத்த நிமிடமே நடந்த மாற்றம்
சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பொதுமக்கள் பணம் கையில் எடுத்துச் செல்ல முடியும். அதற்கு மேல் பணம் கொண்டு செல்வோர், உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.

ரசியல் கட்சிகளுக்கான நடத்தை விதிகளும் நடைமுறைக்கு வந்தன. பொது இடங்கள் மற்றும் அரசு சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அரசு அலுவலங்களில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசுத் திட்டங்களை அறிவிக்கும் புகைப்படங்களும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
ஆட்சியில் உள்ள கட்சி (மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ) தனது அதிகாரத்தைப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பயணத்துடன் தேர்தல் வேலைகளை இணைக்கக்கூடாது. அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது.
அரசு வாகனங்கள், விமானங்கள் மற்றும் பணியாளர்களைப் பயன்படுத்தக்கூடாது.
பொது மைதானங்கள் மற்றும் ஹெலிபேட்கள் போன்ற வசதிகளை ஆளுங்கட்சி மட்டுமே ஏகபோகமாகப் பயன்படுத்தக்கூடாது. மற்ற கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அரசு தங்குமிடங்களை (Guest Houses) பிரச்சார அலுவலகமாகவோ அல்லது பொதுக்கூட்டங்கள் நடத்தவோ பயன்படுத்தக்கூடாது.
அரசு செலவில் சாதனைகளை விளம்பரப்படுத்தும் விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடக்கூடாது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அமைச்சர்கள் நிதி ஒதுக்கீடோ, புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவதோ அல்லது சாலை, குடிநீர் போன்ற வாக்குறுதிகளையோ அளிக்கக்கூடாது.
அரசுப் பணிகளில் தற்காலிக நியமனங்களைச் செய்யக்கூடாது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, முதல்வர் மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வப் பயணங்களுடன் தேர்தல் பிரச்சாரத்தை இணைக்கக் கூடாது.
பேரிடர் அல்லது அவசர காலங்களைத் தவிர்த்து, அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
வெள்ளம், வறட்சி அல்லது பிற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்றுச் செயல்படலாம்.
மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அன்றாடப் பணிகளை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கவனிக்கலாம், ஆனால் அது தேர்தலை நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது.












Click it and Unblock the Notifications