தீபாவளிக்கு முன்பே திமுக புதிய உறுப்பினர் அட்டை! தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் தகவல்!
சென்னை: சென்னை: நவம்பர் 7ஆம் தேதி முதல் திமுக புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் அதில் கூறுவதாவது;

நவம்பர் 7ஆம் தேதி முதல்: ''கடந்த மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், திமுகவில் ஏற்கனவே உள்ள 1 கோடி உறுப்பினர்களுடன் புதிதாக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு நிறைவடைந்துள்ளது. நவம்பர் 7ஆம் நாள் முதல் கழகத்தின் புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகள் வழங்கப்படவிருக்கின்றன.''
தமிழகமெங்கும் பயணிக்கிறேன்: ''கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் வரை களத்தில் பணியாற்றும் போது, கழகத் தலைவர் என்ற பொறுப்பை உங்களால் அடைந்த கழகத்தின் மூத்த தொண்டனான நானும் - தமிழ்நாடு முழுவதும் பயணித்து வருகிறேன். அரசு அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு எந்தளவில் பயன்களைத் தருகின்றன, எந்தெந்த திட்டங்களில் சுணக்கம் தெரிகிறது என்பதை நான் மாவட்டந்தோறும் ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்கி, பணிகளை விரைந்து நிறைவேற்றச் செய்து வருகிறேன். ''
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: ''வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியினைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நாட்களில் நம்முடைய கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து, யார் யார் உண்மையான வாக்காளர்கள், யார் யார் போலியானவர்கள், இறந்துபோனவர்கள் எத்தனை பேர், இடம் மாறியவர்கள் எத்தனை பேர், இரண்டு இடங்களில் பெயர் கொடுத்திருப்போர் யார் என்பது உள்ளிட்டவற்றைக் கவனித்திட வேண்டும். ''
சேலம் திமுக இளைஞரணி மாநாடு: ''இளைஞரணி சார்பில் வருகின்ற டிசம்பர் 17-ஆம் நாள் சேலம் மாநகரில் இளைஞரணியின் மாநில மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற இருக்கிறது. மாநில உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன், இந்தியாவின் தென் திசையிலிருந்து எத்திசைக்கும் பரவுகின்ற வகையில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாட்டைக் கழகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.''












Click it and Unblock the Notifications