ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதி முடிந்ததும்; ஸ்டெர்லைட் ஆலைக்கு திமுக அரசு சீல் வைக்கும் -ஸ்டாலின்
சென்னை: ஆக்ஸிஜன் உற்பத்திக்கான தற்காலிக அனுமதி முடிந்ததும், ஸ்டெர்லைட் ஆலைக்கு திமுக அரசு சீல் வைக்கும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு எவ்வகையிலும் அநீதி இழைத்திடக் கூடாது என பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஸ்டெர்லைட் ஆலை
தமிழக காபந்து அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.கழகம், மருத்துவ ஆக்சிஜனின் தேவையை உணர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

திமுக நிபந்தனை
வேறு எந்த நோக்கத்திலும் ஆலை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்பதும், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டின் தேவைக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, அதன்பிறகே பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டது. தூத்துக்குடி பொதுமக்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், போராட்ட அமைப்பினர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என்பதையும் தி.மு.கழகம் வலியுறுத்தியது. இவற்றைத் தமிழக காபந்து அரசு ஏற்றுக் கொண்டது.

ஆக்சிஜன் உற்பத்தி
அதனடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையிலும் ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தியது. தமிழக அரசு மற்றும் குழுவினரின் முழு கண்காணிப்பில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், ஸ்டெர்லைட்டில் வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜனை தயாரித்து, அது மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கேற்ப ஆக்சிஜனை பிரித்து வழங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு தவறவிட்டது
தமிழக அனைத்துக் கட்சிகள் முன்வைத்த நிபந்தனையின் அடிப்படையிலான அரசின் தீர்மானத்தை உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துரைக்க, தமிழக காபந்து அரசு தவறிவிட்டதன் விளைவு இது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை இனி வரும் நாட்களில் அதிகரிக்கும். எனவே தமிழகத்தின் முழுத் தேவையை நிறைவேற்றிய பிறகு, மீதமுள்ள ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அளித்திடுவதே சரியான வழிமுறையாகும்.

வேண்டுகோள்
ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் வழங்கியிருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும்.பேரிடர் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு எவ்வகையிலும் அநீதி இழைத்திடக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

ஸ்டாலின் உறுதி
ஸ்டெர்லைட் ஆலை தற்காலிக அனுமதியுடன், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வேறு எவ்வகையான செயல்பாட்டுக்காகவும் அல்ல. தி.மு.கழக அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாகச் சீல் வைக்கப்படும் என்ற உறுதியினை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications