சந்தனம், செம்மரம் வளர்க்க உழவர்கள் ஊக்குவிக்கப்படுவர்! முதல்வர் ஸ்டாலின் தந்த உறுதி!
சென்னை: பொருளாதார முக்கியத்துவத்தை மனதில் வைத்து சந்தனம் மரம், செம்மரம் வளர்க்க உழவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் நடைபெற்ற "பசுமை தமிழ்நாடு இயக்கம்" தொடக்க விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பாக அவர் அந்த விழாவில் மேலும் கூறியதாவது;
பட்டும் திருந்தாத இலங்கை.. 8 தமிழக மீனவர்களுக்கு சிறை.. நீதிமன்றம் உத்தரவு - 15 நாட்கள் அடைப்பு
மணமும் குணமும்
மண்ணுக்கும் மணமும் குணமும் சொன்ன இனம் நம்முடைய தமிழினம். தெருவில் படர்ந்து கிடந்த முல்லைக்கு தன்னுடைய தேரைக் கொடுத்தான் பாரி மன்னன்.காடும் காடு சார்ந்து - மலையும் மலை சார்ந்து - கடலும் கடல் சார்ந்து - வாழ்ந்தவர்கள் நம்முடைய தமிழர்கள். அனைத்து கோவில்களிலும் அதற்கெனத் தனித்தனி மரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அப்படித்தான் வளர்த்திருக்கிறார்கள். எனவே தான் இயற்கையைக் காப்பது என்பது நம்முடைய இயல்பிலேயே இருக்கிறது.
இயற்கையும் - பசுமையும்
இயற்கையையும் - பசுமையையும் அரசும், ஆட்சியும் மட்டுமே காப்பாற்றிவிட முடியாது. மக்களும் சேர்ந்தால்தான் காப்பாற்ற முடியும். ஏனென்றால், இயற்கை என்பது அரசினுடைய சொத்து, அது அரசினுடைய சொத்து மட்டுமல்ல - மக்களின் சொத்து! எதிர்கால சமுதாயத்தின் சொத்து! அத்தகைய இயற்கைச் சொத்தை, அரசும் - மக்களும் காக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தில் தான், இந்த பசுமைத் தமிழகம் இன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.
மாபெரும் அச்சுறுத்தல்
இப்போது நமக்கு இருக்கக்கூடிய மாபெரும் அச்சுறுத்தல் என்பது காலநிலை மாற்றம்தான். அதிகப்படியான வெப்பம், வெயில் அடிக்கிறது. மழை என்பது சீரானதாக இல்லாமல், பலமாக அடித்துவிட்டு நின்று விடுகிறது. மழைக்காலம் - வெயில் காலம் என்று பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு நாடு இப்போது மாறி இருக்கிறது, காலநிலை மாறி இருக்கிறது. மழை எப்போது வரும், மழை எப்போது வராது என்று சொல்லமுடியாத அளவிற்கு காலநிலை மாறியிருக்கிறது.
அனல் காற்று
எனவே காலநிலைகளை கணிக்க முடியாத ஒரு சூழ்நிலை இன்றைக்கு மாறியிருக்கிறது. உலகின் சில பகுதிகளில் அனல்காற்று அதிகப்படியாக வீசிக் கொண்டு இருக்கிறது. தோல் எரியக்கூடிய அளவுக்கு காற்று வீசுகிறது. இவை அனைத்தும் இயற்கையை - பசுமையை நாம் மறந்ததால் ஏற்படக்கூடிய எதிர்வினைகள்தான் என்பதை நாம் எச்சரிக்கையுடன் கவனித்தாக வேண்டும்.
மீண்டும் மஞ்சப்பை
மண்ணின் வளம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றை இதற்கு மேலும் மாசுபடுத்தாமல் கவனித்தாக வேண்டும். பிளாஸ்டிக் பைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதற்காகவே "மீண்டும் மஞ்சப்பை" என்ற இயக்கத்தை நாம் முன்னெடுத்திருக்கிறோம்.காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான திறனை நாட்டு மரங்கள் தருகின்றன. எனவே அதிகளவிலான நாட்டு மரங்களை நடுவது இந்த பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமாக இருப்பதை அறிந்து நான் உள்ளபடியே பாராட்டுகிறேன்.
மரம் வளர்ப்போம்
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில், தட்பவெப்ப நிலை மாற்றங்களை தாக்குப் பிடிக்கும் மரங்களை அதிகமாக நடவேண்டும். அடுத்த பத்தாண்டு காலத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் அதிகமான இயற்கைச் சூழலை உருவாக்கியாக வேண்டும். ஒரு அங்குல இடம் இருந்தாலும் கூட, அதில் ஒரு தாவரத்தினை வளர்ப்போம் என உறுதிமொழி எடுத்து, ஒவ்வொருவரும் எத்தனை தாவரங்களை உருவாக்க முடியுமோ அத்தனை தாவரங்களை உருவாக்கி இத்தமிழகத்தினைப் பசுமைமிகு தமிழகமாக மாற்றிட வேண்டும்.
சந்தன மரம்
பொருளாதார முக்கியத்துவத்தையும் மனதில் வைத்து சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க உழவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள். மாநிலத்தின் உணவு உற்பத்தியில் சமரசம் செய்யாமல், மர உற்பத்தியைப் பெருக்க முயற்சிப்போம். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர், உழவர்கள், கிராம ஊராட்சி மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தைப் பெருக்க இந்தத் திட்டம் உதவும் என நம்புகிறேன்.