கர்ஜனை மொழியாக-கனல் மொழியாக கனிமொழி! ஒரு அண்ணனாக எனக்கு பெருமை! தங்கை மீது பாசத்தை பொழிந்த ஸ்டாலின்!
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தனது தங்கை கனிமொழியை நினைத்தால் தனக்கு பெருமையாக உள்ளது என பாசமழை பொழிந்துள்ளார்.
திமுக மகளிர் உரிமை மாநாட்டை திட்டமிட்டது முதல் சோனியா காந்தியை அழைத்து வந்தது வரை எல்லா பணிகளையும் ஒற்றை ஆளாக கனிமொழியே செய்து முடித்திருந்தார். இந்நிலையில் நேற்று மாநாட்டில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது;

பெண்ணினத்தின் எழுச்சியின் அடையாளமாக, இந்த மாநாட்டை 'மாநில மாநாடு' போல் ஏற்பாடு செய்து, எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார் தங்கை கனிமொழி. அவர் கர்ஜனை மொழியாக - கனல் மொழியாக இப்போது நாடாளுமன்றத்தில் முழங்கி வருவதைப் பார்க்கும்போது, கழகத் தலைவராக மட்டுமல்ல, அண்ணனாகவும் நான் மிகுந்த பெருமை அடைந்து வருகிறேன். இந்த மகளிர் உரிமை மாநாட்டைத் தடையின்றி ஓடும் மாரத்தான் ஓட்டம் போல் அமைச்சர் மா.சு அவர்கள் துணை நின்று ஏற்பாடு செய்திருக்கிறார்.
இதுவரை 'சென்னை சங்கமம்' நடத்திக் காட்டிய தங்கை கனிமொழி, இப்போது இந்தியச் சங்கமத்தை நடத்திக் காட்டி இருக்கிறார். இதுதான் வித்தியாசம். இவை அனைத்துக்கும் மகுடம் வைப்பது போல அன்னை சோனியா காந்தி வருகை தந்துள்ளார்.
தனக்காக காத்திருந்த பிரதமர் பதவியை மறுத்து இந்திய அரசியல் வானில் ஒரு கம்பீரப் பெண்மணி என நின்றவர் அன்னை சோனியா காந்தி. அப்போது அன்னை சோனியா காந்தி அவர்கள்தான் ஆட்சிக்குத் தலைமை வகித்து பிரதமராக வேண்டும் என்று முன்மொழிந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அது வரலாறு.
கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்தபோது, அன்னை சோனியா காந்தி எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் அவர், "கலைஞர் அவர்களின் மறைவு எனக்குத் தனிப்பட்ட முறையிலும் இழப்பாகும். என் மீது அவர் எப்போதுமே மிகுந்த கனிவும் அக்கறையும் கொண்டிருந்ததை நான் எப்போதுமே மறக்க இயலாது. அவர் எனக்கு ஒரு தந்தையைப் போன்றவர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்தகைய ஆழமான குடும்பப் பாச நட்பைக் கொண்டவர் அன்னை சோனியா காந்தி அவர்கள். அவரும் - இளம் அரசியல் ஆளுமையாக மிளிரும் அருமைச் சகோதரி பிரியங்கா காந்தியும் இங்கு வந்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.












Click it and Unblock the Notifications