எய்ம்ஸ் சும்மா.. கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனைதான் பெஸ்ட்! - ஏன் தெரியுமா?
சென்னை: கடந்த 2010 ஆம் ஆண்டு தனது மனைவியின் காலத்திற்குப் பிறகு, தான் வாழ்ந்த கோபாலபுரம் வீட்டைப் பொதுமக்கள் பயன்படும் வகையில் மருத்துவமனையாக மாற்ற உயில் எழுதி வைத்தார் கருணாநிதி
அவரின் கனவை நனவாக்கும் வகையில் 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'யை திறந்து வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

"கருணாநிதிக்கு மிகமிகச் சரியான புகழஞ்சலி இது. இதைவிட வேறு பொருத்தமானது வேறு எதுவும் இல்லை"என்கிறார் மருத்துவர் அமலோற்பவ நாதன்.
"முன்னாள் முதல்வர் கருணாநிதி ஏழைகளுக்குச் சரியான மருத்துவம் போய்ச் சேரவேண்டும் என்றுதான் அவர் அதிகம் ஆசைப்பட்டார். ஆகவே வேறு எதைச் செய்வதைவிட மருத்துவமனையை அவர் பெயரில் கட்டுவதில்தான் எங்களைப் போன்றவர்களுக்கு அதிக மனநிறைவு உள்ளது" என்கிறார் அமலோற்பவ நாதன்.

"உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையை முதன்முதலாகத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய முதல் முதல்வர் கருணாநிதிதான். இன்றைக்கு அது இந்தியா முழுமைக்கும் முன்னோடி திட்டமாக மாறி இருக்கிறது.
கருணாநிதி கொண்டுவந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை டபுள்யூ.ஹெச்.ஓ.வே பாராட்டி இருக்கிறது. இந்த அமைப்பு, 'தமிழ்நாடு மூன்றாம் உலக நாடுகளுக்கு ஒரு மாடல்' என்று அதிகாரப்பூர்வமான கூட்டத்திலேயே அறிவித்தது. மருத்துவச் சிகிச்சையில் அந்தளவுக்குத் தொலைநோக்குடன் சிந்தித்தவர் அவர்.
அவரது ஆட்சியில் மருத்துவ நிதிநிலை அறிக்கையில் ஒருமுறைகூட செலவிடும் தொகையைக் குறைத்ததே இல்லை அவர். எந்த உபகரணங்களை வாங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தால் உடனடியாக நிதியை அளிப்பார்.

ஆகவேதான் அவர் தன் இறுதிக்காலத்தில் வீட்டைக் கூட பொதுமக்களின் மருத்து தேவைக்காக எழுதிக் கொடுத்தார்" என்கிறார் அமலோற்பவ நாதன்.
இவர் சொல்வது உண்மைதான். எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் கூட சென்னையில் முதன்முதலாக வாங்கிய கோபாலபுரம் வீட்டை விட்டு வேறு பகுதிக்குக் கருணாநிதி குடியேறவே இல்லை.
1955ஆம் ஆண்டு சர்வேசுவர அய்யரிடமிருந்து இந்த வீட்டை அவர் வாங்கினார். 1968 ஆம் ஆண்டு தன் மகன்களான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய 3 பேரின் பெயரில் வீட்டைக் கருணாநிதி எழுதி வைத்தார்.
அதன்பின் அவர் மனம் மாறியது. இந்த வீட்டை ஏழை எளியவர் பயன்பெறுவதற்காக வேண்டி இலவச மருத்துவமனையாக மாற்ற நினைத்தார். அதையடுத்து மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய மூவரும் வீட்டை மீண்டும் கருணாநிதியிடம் ஒப்படைத்தனர்.
அதனையடுத்து அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை பெயரில் வீடு மாற்றப்பட்டது. வீட்டை மருத்துவமனையாக்க விரும்பியவர் பெயரில், ஒரு பன்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையை ஒரே ஆண்டில் கட்டி திறந்துள்ளது தமிழ்நாடு அரசு.

கிண்டியில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையானது 6 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 7 தளங்கள் உள்ளன. 1,000 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 230 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
மேலும் 146.52 கோடி ரூபாய்க்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் என 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இருதய கேத்லேப், மூலை இரத்தநாள கேத்லேப், தீவிர இருதய சிகிச்சை, தீவிர மயக்கவியல், 15 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் என ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு வசதிகள் பல்கிப் பெருகி உள்ளன.
இந்த மருத்துவமனையின் வருகையால் தமிழ்நாட்டின் பொது மருத்துவக் கட்டமைப்பு 100 படி முன்னேறப் போகிறது. அது குறித்து நாம் அமலோற்பவ நாதனிடம் தொடர்ந்து பேசினோம்.
"15 மாதங்களில் இவ்வளவு பிரம்மாண்டமான மருத்துவமனையைக் கட்டி இருக்கிறோம். அது உண்மையிலேயே மாபெரும் சாதனை. இது கிண்டியில் உள்ளது. சென்னையின் மையப் பகுதி இல்லை. ஆகவே, சென்னை சிட்டியைத் தாண்டி அருகில் உள்ள செஞ்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் எனப் பல மாவட்டப் பகுதி மக்களுக்குக் கட்டாயம் பயனளிக்கும்.
குறிப்பாக இதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்றுச் சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்றவை எல்லாம் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்குள் வந்துவிடும்.
ஏழைகளுக்கும் உயர் பன்நோக்கு சிகிச்சை கிடைப்பதற்கு இந்தக் கிண்டி மருத்துவமனை உதவும். இது மாபெரும் புரட்சி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே இல்லை. அதை ஏழைகள் பயன்பெறும் வகையில் செய்து தந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தியாவிலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடுதான் முன்னோடி. பல உலக நாடுகளிலிருந்து சிகிச்சை பெறத் தமிழ்நாட்டுக்கு நோயாளிகள் வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும் விடத் தமிழ்நாடு மருத்துவச் சிகிச்சையில் சிறந்து விளங்கி வருகிறது. அதைத் தைரியமாகச் சொல்வேன்.

அதனால்தான் செல்கிறேன்; மதுரை எய்ம்ஸ் எல்லாம் சும்மா. அதைவிடப் பெரிய வசதி படைத்த அரசு மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆகவே, அடித்து சொல்லலாம்.
இந்தக் கிண்டி மருத்துவமனை தமிழ்நாட்டில் மருத்துவரீதியாக மாபெரும் பலனை அளிக்கப் போகிறது" என்கிறார் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி மருத்துவர் அமலோற்பவ நாதன்.












Click it and Unblock the Notifications