ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நியூஸ் 18 செய்தி நிறுவனம் சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் முதல்வராக யார் வர வேண்டும்? என மக்கள் கூறியது மற்றும் எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவாக உள்ளனர்? என்ற முக்கிய தகவல் இடம்பெற்றுள்ளது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 24ம் தேதி ஓட்டு பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் சிஎன்என் - நியூஸ் 18 செய்தி நிறுவனம் தமிழகத்தில் சர்வே நடத்தியது. மொத்தம் 7,992 பேர் பங்கேற்றனர். இந்த சர்வேயின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? தமிழகத்தில் எந்த பிரச்சனை முதன்மை இடத்தில் உள்ளது? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் அளித்த தகவலின்படி ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:
முதல்வராக யார் வேண்டும்?
இந்த கருத்து கணிப்பின்போது முதலமைச்சர் பதவிக்கு யாரை விரும்புகிறீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டாலின் தான் முதல்வராக வேண்டும் என்று 39.9 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக வேண்டும் என்று 37.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் இடையே வெறும் 2.4 சதவீதம் தான் வித்தியாசமாக உள்ளது.
ஜாதி வாரியாக மக்கள் ஆதரவு யாருக்கு?
அதுமட்டுமின்றி கடந்த 5 ஆண்டு ஸ்டாலின் ஆட்சி பற்றிய கேள்விக்கு பட்டியலினத்தவர்கள் திமுக அரசின் செயல்பாட்டை பாசிட்டிவாக பார்ப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக பெரும்பாலானவர்கள் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் பிற்படுத்தப்பட்டோர், உயர் ஜாதி இந்துக்கள் என்று சொல்லும் பிரிவினர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்கள் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் சிறுபான்மையினராக உள்ளவர்களில் பாதிக்கு மேல் ஆட்சி திருப்தியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு பக்கப்பலமாக இருக்கினறனர். இது முதல்வர் ஸ்டாலினின் 5 ஆண்டு ஆட்சி மீதான பொதுமக்களின் மாறுபட்ட கருத்தை பிரதிபலிக்கிறது.
முக்கிய பிரச்சனை என்ன?
மேலும் தேர்தலில் முக்கியப் பங்காற்றும் பிரச்சனைகளின் பட்டியலில் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு பிரச்சனையாக உள்ளது என்று 20.1% பேர் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக பெண்களின் பாதுகாப்பு பற்றிய கவலை என்று 17.8% சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சட்டம் - ஒழுங்கு குறித்த அச்சத்ததை 17.3% பேரும், வேலையின்மை தான் பிரச்சனை என்று 15.5% பேரும் தெரிவித்துள்ளனர்.
அதிலும் இளம் வயது தலித் மக்கள் வேலையின்மையை சுட்டிக்காட்டி உள்ளனர். ஊழல் தான் பெரும் பிரச்சனை என்று உயர் ஜாதி இந்துக்கள் தெரிவித்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அனைத்து தரப்பு மக்களும் தெரிவித்து உள்ளனர்.
இருமுனை போட்டி தான் என்று..
இந்த கருத்து கணிப்பின்போது நடைபெற உள்ள தேர்தல் திமுக - அதிமுக இடையேயான போட்டியாக தான் இருக்கும் என்று 41.2%, பேர் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் 18.7% பேர் தான் திமுக - அதிமுகவுடன் தவெகவையும் சேர்த்து மும்முனை போட்டி என தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் இந்த தேர்தல் என்பது திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்கு எளிமையாக இருக்காது. ஆட்சியை கைப்பற்றுவதில் இருகட்சிகள் இடையே கடும் போட்டி இருக்கும் என்று சிஎன்என் - நியூஸ் 18 கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது..
திமுக - அதிமுக இடையே கடும் போட்டி
அதன்படி தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் தற்போதைய கருத்து கணிப்பில் திமுக தலைமையிலான கூட்டணி 113 முதல் 123 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் அதிமுக தலைமையிலான பாஜகவின் கூட்டணி 106 முதல் 116 தொகுதிகளிலும், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications