டெல்லிக்கு போன "போன்".. 2 துருவங்களை சந்திக்க வைக்க போகும் ஸ்டாலின்! தேசிய அரசியலில் விரைவில் ட்விஸ்ட்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் இரண்டு அரசியல் துருவங்கள் சந்தித்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக ஆளாத மாநிலங்களை சேர்ந்த மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாஜகவிற்கு எதிராக ஒன்று திரள முயன்று வருகிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ் ஆகியோர் முன்னெடுப்பில் இந்த கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றும் மம்தா பானர்ஜியின் அழைப்பின் பெயரில் நடக்க உள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்காக இந்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

காங்கிரஸ்
ஆனால் என்னதான் எதிர்க்கட்சிகள் ஒரு குடையின் கீழ் இணைய முயன்றாலும் காங்கிரஸ் கட்சி என்ன செய்யும் என்பது புதிராகவே உள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியை மாநில கட்சிகளின் தேசிய அளவிலான கூட்டணியில் சேர்த்துக்கொள்ள சில கட்சிகளுக்கு பெரிய விருப்பம் கிடையாது. முக்கியமாக மேற்கு வங்க முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியை தேசிய அளவிலான புது கூட்டணியில் சேர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை.

மம்தா காங்கிரஸ்
சமீபத்தில் மம்தா அளித்த பேட்டியில், மதசார்பற்ற கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டிய தருணம் இது. மாநில அளவில் வலுவாக இருக்கும் மதசார்பற்ற கட்சிகள் ஒரு குடைக்கு கீழ் இணைய வேண்டிய தருணம் இது. காங்கிரஸ் கட்சி எந்த மாநில கட்சியுடனும் நல்ல உறவில் இல்லை. அதனால் காங்கிரஸ் அதன் தனி பாதையில் சென்று விடலாம். நாங்கள் எங்கள் வழியில் தனியாக செல்வோம் என்று மம்தா கூறியுள்ளார். அதாவது காங்கிரசை தேசிய அளவிலான கூட்டணியில் சேர்க்காமல் மூன்றாவது அணி உருவாக்குவதற்கான விருப்பத்தை மம்தா வெளிப்படுத்தி உள்ளார்.

அகிலேஷ் யாதவ்
இன்னொரு பக்கம் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் தேசிய அளவில் கூட்டணி உருவாக்கப்பட்டால் அதில் காங்கிரசை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி இடையே கூட்டணி ஏற்படவில்லை. அங்கு அகிலேஷ் - பிரியங்கா இடையே ஆங்காங்கே பிரச்சாரங்களில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பதை அகிலேஷ் விரும்ப மாட்டார்.

கருத்து வேற்றுமை
கடந்த வருடம் ராகுல் மற்றும் சோனியாவை மம்தா சந்தித்ததும் பெரிய அளவில் வெற்றியோடு முடியவில்லை. ராகுல் - மம்தா இடையே கொள்கை ரீதியாக ஒற்றுமை ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக தேசிய அளவில் மாநில கட்சிகள் அமைக்கும் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்க கூடாது. மாநில கட்சிதான் தலைமை தாங்க வேண்டும் என்று மம்தா கூறி வருகிறார். ஆனால் தேசிய அளவில் பெரிய கட்சி என்பதால் காங்கிரஸ்தான் தலைமை வகிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள்.

இணக்கம் இல்லை
இதனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையே பெரிய அளவில் இன்னும் இணக்கம் ஏற்படவில்லை. மற்றபடி பாஜகவிற்கு எதிரான மற்ற மாநில கட்சிகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒன்று சேர்ந்துவிட்டன. காங்கிரஸ் தனித்து விடப்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் இரு துருவங்களாக இருக்கும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இரண்டும் ஒரு மேடையில் தோன்றும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அதாவது ராகுல் காந்தியும், மம்தாவும் ஒரே மேடையில் தோன்ற உள்ளனர்.

ஒரே மேடை
முதல்வர் ஸ்டாலின் தனது சுயசரிதை புத்தகமான உங்களில் ஒருவர் புத்தகத்தை வெளியிட போவதாக அறிவித்துள்ளார். இன்னும் 2 வாரங்களில் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 'உங்களில் ஒருவன்' நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழாவிற்கு ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்க மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், உள்ளிட்ட பல எதிர்கட்சித் தலைவர்கள் வர உள்ளனர்.

ராகுல் சந்திப்பு
இந்த நிகழ்வில்தான் ராகுல் - மம்தா இருவரும் சந்தித்துக்கொள்ள இருக்கிறார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரசை சேர்ப்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து போன் செய்து விழாவிற்கு வர அழைப்பு சென்றுள்ளது. மம்தாவிற்கும் இதே அழைப்பு சென்றுள்ளது. இந்த நிலையில் இந்த மாதம் நடக்க உள்ள இவர்களின் சந்திப்பு தேசிய அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications