ஸ்டான் சுவாமி சிறைக் காவலில் மரணம்.. தமிழ்நாடு முழுக்க ஜூலை 8ல் சிபிஐஎம் ஆர்ப்பாட்டம்!
சென்னை: ஸ்டான் சுவாமி சிறைக் காவலில் மரணம் அடைந்ததை அடுத்து மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுக்க ஜூலை 8ல் சிபிஐஎம் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
Recommended Video
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த சமூக போராளி ஸ்டான் சாமி இன்று மானம் அடைந்தார். 2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் இவர் மீது வழக்கு உள்ளது.

மகாராஷ்டிராவில் இவருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் என்ஐஏ அமைப்பு இவரை விசாரித்து வந்த நிலையில் பெயில் மட்டும் மறுக்கப்பட்டு வந்தது. பெயில் கிடைக்காமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று மரணம் அடைந்தார்.
ஸ்டான் சாமி மரணம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், பாதிரியாருமான ஸ்டான் சுவாமி அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
ஸ்டான் சுவாமி அவர்கள் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக பட்டித்தொட்டி எங்கும் குரல்கொடுத்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 9ந் தேதி பீமா கோரேகான் சம்பவத்தையொட்டி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளியான அவருக்கு சிறையில் சரியான சிகிச்சை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
குறைந்தபட்ச தேவையான உறிஞ்சி குடிக்கும் டம்ளர் கூட கொடுக்கப்படவில்லை. முறையாக உணவருந்த முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். பிணையில் வெளிவருவதற்கான முயற்சியும் பலனளிக்கவில்லை. குறிப்பாக, நெரிசலும், கோவிட் தொற்றும் மிகுந்த தலோஜா சிறையிலிருந்து 84 வயதான ஸ்டான் சுவாமி அவர்களை மாற்ற வேண்டுமென்ற பலமட்ட கோரிக்கைகளையும் அரசு செவிமடுக்கவில்லை. மும்பை உயர்நீதிமன்ற தலையீட்டின் அடிப்படையிலேயே தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனாலும், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே வந்து இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சட்டவிரோத தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், தேச துரோகச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்களின் கீழ் சமூக செயற்பாட்டாளர்களும், அரசாங்கத்தை விமர்சிப்பவர்களும் மிக அதிகமான எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தான் ஸ்டான் சுவாமி அவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது பொய் வழக்கை தொடுத்தவர்கள், மனித தன்மையற்ற முறையில் அவரை நடத்தியவர்கள் இதன் மூலம் அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பீமா கோரேகான் வழக்கிலும் இதர அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளிலும் அடக்குமுறை சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும்; அனைத்து பகுதி மக்களும் சிறைக்காவலில் நடந்த இந்த அநீதியான மரணத்தை எதிர்த்தும், கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதை எதிர்த்தும், அரசை விமர்சிப்பவர்கள் பொய் வழக்கில் சிறையில் தள்ளப்படுவதை எதிர்த்தும் உறுதியாக குரல் கொடுக்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இந்த அநீதியை எதிர்த்து 8.7.2021 அன்று தமிழகம் முழுவதும் கண்டன இயக்கங்கள் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. இவ்வியக்கத்தில் ஒத்த கருத்துள்ள ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டு இந்த அநீதிக்கெதிராக கண்டன குரலெழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications