ரிஸ்க் எடுத்த டாக்டர்கள்.. ஸ்டான்லியில் தொழிலாளிக்கு மறுவாழ்வு.. கல்லீரல் மாற்று சிகிச்சை வெற்றி
சென்னை: கல்லீரல் செயலிழந்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உயிருக்கு போராடிய கூலி தொழிலாளிக்காக வேலூரில் இருந்து காரில் கல்லீரல் கொண்டு வரப்பட்டு சினிமா பாணியில் ரிஸ்க் எடுத்து பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. தற்போது கூலி தொழிலாளி நலமாக இருக்கிறார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் லோகேஷ் ராஜா ராம் என்பவர் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவசியம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தனியார் மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவாகும். அதோடு பணம் இருந்தாலும் கூட கல்லீரலை யாராவது தானமாக வழங்க வேண்டும். லோகேஷ் ராஜா ராமை எடுத்து கொண்டால் அவர் டிரைவர். இதனால் அவரிடம் பண வசதி இல்லை.
இதனால் அவர் உடல்நல பிரச்சனை வரும்போதெல்லாம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று கொண்டார். இந்நிலையில் தான் வேலூரில் இருந்து தானமாக கிடைத்த கல்லீரல் தற்போது லோகேஷ் ராஜாராமுக்கு அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். லோகேஷ் ராஜா ராமை காப்பாற்ற டாக்டர்கள் சினிமா பாணியில் பெரிய ரிஸ்க் எடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி வேலூரில் இருந்து கல்லீரலை காரில் எடுத்து வந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறையின் மருத்துவர் சந்திரபோஸ் அப்பேத்கர் கூறுகையில், ‛‛கல்லீரல் பெறுவதற்காக வேலூருக்கு சென்றோம். ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. கல்லீரலை எடுத்தோம். அந்த கல்லீரலை குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டு வர வேண்டிய தேவை இருந்தது. நாம் எதிர்பார்க்கும் நேரத்தில் கல்லீரலை கொண்டு செல்ல வேண்டும் என்றால் காரில் செல்வது தான் சரியாக இருக்கும் என்று யோசித்தோம்.நான் ஏதாவது வழியில் சிக்கல் வந்தால் என்னவாகும் என்று யோசித்தேன்.
ஆனால் நோயாளியை பற்றி நினைத்தோம். அவர் ஒரு வருடமாக நம்மிடம் வந்து செல்கிறார். நம்மிடமிருந்து அவருக்கு புதுவாழ்க்கை கிடைக்கும் என்று நம்புகிறார். அவருக்கு எப்படியாவது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து புது வாழ்க்கையை வழங்க வேண்டும். இதை சரியாக செய்ய வேண்டும் என்றார்.
கல்லீரலை சரியான நேரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. அந்த சமயத்தில் வேறு கவலை எதுவும் இல்லை.
அதனால் ஜஸ்வந்த் சார், உறுப்பு மாற்றுக்கான ஒருங்கிணைப்பாளர் செந்தில் இருந்தனர். நான் தான் கார் ஓட்டினேன். கல்லீரலை முறைப்படி இங்கு கொண்டு வந்து சேர்த்தோம். ஆபரேஷன் சீக்கிரமாக முடிந்துவிட்டது. இது இளம் கல்லீரல். ஆபரேஷன் ரொம்ப வேகமாக நடந்து முடிந்துவிட்டது. சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.
இதுபற்றி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை துறையின் தலைவர் ஜஸ்வந்த் கூறுகையில், ‛‛கல்லீரலை பொறுத்தவரை 7 முதல் 8 மணிநேரத்தில் பொருத்தினால் அதன் சக்சஸ் ரேட் ரொம்ப நன்றாக இருக்கும். இருப்பினும் கல்லீரலை பாதுகாக்கும் முறை உள்ளது. இதன்மூலம் தள்ளிப்போடலாம். வேலூரில் இருந்து 3 மணிநேரத்தில் சென்னை வந்தோம். அதன்பிறகு 5 மணிநேரத்தில் பொருத்திவிட்டோம். 8 மணிநேரத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிவடைந்தது. 18 வயது நபரின் கல்லீரல் அது. இதனால் அவர் 10வது நாளில் டிஸ்சார்ஜ் ஆனார். பொதுவாக கல்லீரல் குளிர்ந்த நிலையில் இருந்தால் தான் கெட்டுப்போகாது. 4 டிகிரி சென்டிகிரேட் அளவில் கொண்டு வர வேண்டும். முறைப்படி கல்லீரலை கொண்டு வந்து நோயாளிக்கு பொருத்திவிட்டோம்'' என்றார்.
கல்லீரல் பொருத்தப்பட்ட லோகேஷ் ராஜா ராம் கூறுகையில், ‛‛எனக்கு இந்த பிரச்சனை எப்போது இருந்து இருக்கிறது என்பது தெரியவில்லை. எனக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதன்பிறகு குடிப்பழக்கத்தை விட்டுவிட்டேன். மஞ்சள் காமலை பாதிப்பை கவனிக்காமல் விட்டதால் பிரச்சனை வந்தது. இதனை 8 மாதத்துக்கு முன்பு கண்டுபிடித்தனர். ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் தான் கண்டுபிடித்துள்ளனர். முதல்வர் காப்பீட்டு திட்டம் மூலமாக ஆபரேஷன் செய்து இப்போது நன்றாக இருக்கிறேன். நான் சொல்வதற்கு முன்பாக டாக்டர்கள் கவனித்து கொண்டனர். என்னால் நடக்க முடியாது. உட்கார்ந்தால் எழுந்து நிற்க முடியாது. ஆனால் சிகிச்சைக்கு பிறகு என்னால் நடக்க முடிகிறது. எல்லா வேலைகளையும் நானே செய்து கொள்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications