44வது செஸ் ஒலிம்பியாட்.. சென்னையில் நடக்க யார் காரணம்.. மத்திய அரசின் பங்கு என்ன?
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடர் தமிழ்நாட்டில் நடத்தப்படுவதற்கு மத்திய அரசு சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம்.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. இன்று முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக சர்வதேச வீரர்கள் மாமல்லபுரம் வந்து சேர்ந்துள்ளனர்.

விழாக்கோலம்
இதனிடையே சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. செஸ் விளையாட்டை பிரபலப்படுத்தும் வகையில் நகரின் முக்கிய இடங்களுக்கு வண்ணம் தீட்டுவது, பேனர்கள், தீம் பாடல், செல்ஃபி பாய்ண்ட், பேருந்துகள் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டின் முக்கியப் பகுதிகளிலும் கறுப்பு வெள்ளை காய்ச்சல் அடித்தது போல் செஸ் ஒலிம்பியாட் விளம்பர நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

சர்ச்சை
இதனிடையே செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை ஏன் சேர்க்கவில்லை என்று பாஜக கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் செஸ் ஒலிம்பியாட் பேனர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மத்திய விளையாட்டுத்துறை அனுமதி கொடுக்காமல் தமிழக அரசு நடத்த முடியுமா என்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழக அரசின் பங்கு
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதற்கான முழு செலவுகளையும் தமிழக அரசு மட்டுமே ஏற்றுள்ளது. செஸ் வீரர்களுக்கான தங்கும் வசதிகளில் இருந்து, செஸ் ஒலிம்பியாட் ஜோதி பயணம், தொடக்க விழா, நிறைவு விழா, விளம்பரங்கள் வரை அனைத்து செலவுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. அதேபோல் சர்வதேச செஸ் கூட்டமைப்பும் பிரிசிபல் ஸ்பான்சராக தமிழக அரசு என்றே கூறியுள்ளது.

மத்திய அரசின் பங்கு என்ன?
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய விளையாட்டுத்துறை தான். அதேபோல் சர்வதேச வீரர்கள் இந்தியா வருவதற்கான விசா பிரச்னைகளை சரி செய்தது உள்ளிட்ட அடிப்படை விவகாரங்களில் மத்திய அரசு பங்கு வகித்துள்ளது. அதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராகவே பிரதமர் மோடி அழைக்கப்பட்டுள்ளார்.
ஆகவே, நாட்டின் பிரதமர் என்ற வகையில் தமிழக அரசு நடத்தும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும். ஆனால் அது தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு உட்பட்டதாகும். அதேபோல் செஸ் ஒலிம்பியாட் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கு தமிழக அரசே முயற்சித்தது. அதனால் மட்டுமே செஸ் ஒலிம்பியாட் தொடர் இந்தியாவில் நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications