நாட்டிலேயே மோசமான மாசு ஏற்படுத்தும் ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று.. மத்திய அரசு
சென்னை: நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூறியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வரும் பேராசிரியர் பாத்திமா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார்.
வழக்கில் இடையீட்டு மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளவர் அரசுத்தரப்புக்கு உதவியாக இருக்க வேண்டும் என ஆலைதரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர் வைகை, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விவசாய நில பகுதியில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது விதிமீறிய செயல் எனக் குறிப்பிட்ட அவர், நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், மாசு ஏற்படுத்தவில்லை என தொடர்ந்து ஸ்டெர்லைட் தரப்பில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்கு உடந்தையாக செயல்பட்டது துரதிருஷ்டவசமானது என மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டார். அவரது வாதம் முடிவடையாததால் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications