பிரச்சனை முடியல.. திடீர் திருப்பங்கள்.. மீண்டும் மோதலுக்கு அஸ்திவாரம் போட்ட பொதுக்குழு சம்பவங்கள்!
சென்னை : அதிமுக பொதுக்குழு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் பாதியிலேயே கலைந்துள்ளது. அடுத்த பொதுக்குழுவிற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அதுவரை அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
Recommended Video
பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆவேசமாகப் பேசினர். ஒற்றைத் தலைமை விவகாரம் பற்றி முடிவெடுக்க வேண்டும் என குரல் எழுப்பினர்.
இதையடுத்து, ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடத்தப்படும் என அவைத்தலைவர் அறிவித்த நிலையி, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக பொதுக்குழுவில் பாதாம் கீர், ஜாங்கிரி.. 5 ஆயிரம் பேருக்கு தடபுடல் விருந்து.. மெனு லிஸ்ட் இதோ!
பொதுக்குழு
பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வீற்றிருந்தனர். பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.
23 தீர்மானங்களை நிறைவேற்ற
பொதுக்குழுவில், 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொது விவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
நிராகரிப்பு
தீர்மானங்களை நிறைவேற்ற ஓபிஎஸ் முன்மொழிந்து, ஈபிஎஸ் வழிமொழிந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திடீரேன எழுந்து மைக் அருகே சென்று, அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாக கோஷம் எழுப்பினார். தொடர்ந்து கே.பி.முனுசாமியும் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகவும், அவர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமைதான் என்றும் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சி.வி.சண்முகம் கடிதம்
அதிமுக-வில் ஒற்றைத் தலைமை வேண்டும், இரட்டைத் தலைமையை ரத்து செய்து ஒரே தலைமையின்கீழ் கொண்டு வருவது பற்றி இங்கு விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான தேதியையும் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றும் கோரி பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை சி.வி.சண்முகம் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேனிடம் வழங்கினார்.
மீண்டும் பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன் உரையாற்றுகையில், பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ஆம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்தார்.
மீண்டும் மோதல் போக்கு
மீண்டும் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஓ.பன்னீசெல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மேடையில் இருந்து எழுந்து, பொதுக்குழுவைப் புறக்கணித்துவிட்டுக் கிளம்பினர். பொதுக்குழு கூட்டத்தில் இருந்து மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்த ஓபிஎஸ்ஸை நோக்கி தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு
பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே பல்வேறு கூச்சல் குழப்பங்கள் நிகழ்ந்த நிலையில், முக்கிய நிர்வாகிகளும், தன்னை அவமதிக்கும் வகையிலேயே நடந்துகொண்டதில் ஓபிஎஸ் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளார். இந்நிலையில் சட்டத்திற்குப் புறம்பான பொதுக்குழு, ஓபிஎஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரச்சனை தீராது
இன்றைய பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுப்பப்பட்டாலும், மற்ற 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் பொதுக்குழு பாதியிலேயே கலைந்துள்ளது. அடுத்த பொதுக்குழுவிற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அதுவரை அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட திட்டம் பற்றி விரைவில் தெரியவரும்.. பார்க்கலாம்!