நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் நிறுத்தி பயணியிடம் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை: சென்னை அருகே நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை திட்டமிட்டு நிறுத்தி பெண் பயணியிடம் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டாங்கொளத்தூர் - பொத்தேரி இடையே சிக்னலை மறைத்து ரயிலை நிறுத்திய மர்மநபர், பின்னர் நகையை பறித்து தப்பிய நிலையில், தீவிர விசாரணை நடத்திய தாம்பரம் ரயில்வே போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
காட்டாங்கொளத்தூர் - பொத்தேரி இடையே, பச்சை நிற விளக்கு எரியும் சிக்னலில் துணியை கட்டி மறைத்து ரயிலை நிறுத்தி பின்னர் பெண் பயணியிடம் தங்க நகையை பறித்து சென்றுள்ளார். வினோத திருட்டில் ஈடுபட்ட நபரை தாம்பரம் ரயில்வே போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர் பகல் நேரங்களில் ஆட்டோ ஓட்டுனராகவும், இரவு நேரங்களில் தொடர்ந்து ரயில் பயணிகளை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தங்க நகை திருட்டு
சென்னையில் இருந்து நெல்லைக்கு தினமும் நெல்லை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8 மணியளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கம் போல் கடந்த 15 ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டுள்ளது. ரயில் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் - பொத்தேரி ரயில் நிலையம் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது சிக்னல் கோளாறு காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் நின்றது. இதே போன்று எதிரே வந்த ரயிலும் மெதுவாக வந்தது.
அப்போது திடீரென நபர் ஒருவர் ரயில் பெட்டிக்குள் புகுந்துள்ளார். ரயிலில் இருந்த பெண் பயணி ஒருவரின் கழுத்தில் கிடந்த தங்கச் செயினை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி உடனடியாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு புகார் அளித்தார். அதன்பேரில் தாம்பரம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகர, திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
வில்லிவாக்கம் நபர் கைது
சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார் வந்து பார்க்கும் போது, அந்த இரண்டு தண்டவாளத்திலும் உள்ள சிக்னலில், பச்சை நிற விளக்கு எரியும் பகுதி மட்டும் துணியால் கட்டப்பட்டு மறைக்கப்பட்டு இருந்தது. சிக்னலை மறைத்துவிட்டு ரயில் நின்றதும், ரயிலில் ஏறி பயணிகளிடம் நகை பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் வில்லிவாக்கத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. பகல் நேரங்களில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வரும் இவர், இரவு நேரங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. மேலும் இவர் ரயில் பயணிகளை குறிவைத்து உடைமைகளை வழிப்பறி செய்தும் வந்துள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குமரேசனை அதிரடியாக கைது செய்தனர்.
கொருக்குப்பேட்டை, சென்னை சென்டிரல், ராயபுரம் என 6 போலீஸ் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக குமரேசனிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரயிலை நிறுத்தி பயணியிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.














Click it and Unblock the Notifications