சிங்கம் பட பாணியில்.. 52 மணி நேரமாக தொடரும் சைலேந்திரபாபுவின் ஸ்டார்மிங் ஆபரேஷன்- எப்படி நடக்கிறது?
சென்னை: தமிழ்நாட்டில் போலீசார் நடத்தி வரும் "ஸ்டார்மிங் ஆபரேஷன்" மிக தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது. 3 நாட்களை கடந்தும் ஆபரேஷன் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
Recommended Video
சிங்கம் பார்ட் 1 படத்தில் சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகும் போலீஸ் அதிகாரி துரை சிங்கம் சென்னையில் இருக்கும் ரவுடிகளை ஒரே நாளில் கைது செய்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். படத்தில் மட்டுமே இதெல்லாம் நடக்கும் என்று பலரும் நினைத்த நிலையில் தற்போது நிஜத்தில் சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில், டிஜிபி சைலேந்திரபாபுவின் நேரடி கண்காணிப்பில் இந்த "ஸ்டார்மிங் ஆபரேஷன்" நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுக்க ரவுடியிசத்தை ஒழிப்பதுதான் இந்த ஆபரேஷனின் ஒரே நோக்கம்.

ரவுடி கைது
இதற்காக கடந்த 23ம் தேதியில் இருந்து கைது நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கொலை வழக்குகளில் கைதானவர்கள், பெயிலில் வெளியே வந்தவர்கள், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் இப்படி கைது செய்யப்பட்டு உள்ளனர். முக்கியமாக கூலிப்படையை சேர்ந்தவர்கள் அதிகமாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கூலிப்படைக்குதான் இந்த ஆபரேஷனில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

கொலை குற்றங்கள்
கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே கொலை குற்றங்கள் அரங்கேறியது. முக்கியமாக தென் மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் நிறைய கூலிப்படைகள் ஈடுப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சரியாக கூலிப்படையினரையும், பல்வேறு ரவுடி கும்பல்களின் தலைவர்களையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள். இனி எங்கும் கொலை நடக்க கூடாது என்பதால் அரசு தீவிரமாக இந்த நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

அவப்பெயர்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்த கொலை குற்றங்கள் அரசுக்கு எதிராக மாறிவிட கூடாது. அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட கூடாது என்பதால் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஆளும் கட்சிக்கு இதுவரை பெரிதாக கெட்ட பெயர் எதுவும் இல்லாத நிலையில் ரவுடிகள், கொலைகள் காரணமாக கெட்ட பெயர் ஏற்பட்டுவிட கூடாது என்பதால் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

டிஜிபி சைலேந்திரபாபு
தமிழ்நாடு முழுக்க டிஜிபி சைலேந்திரபாபுவின் நேரடி கண்காணிப்பின் பெயரில் இந்த ஸ்டார்மிங் ஆபரேஷன் நடக்கிறது. அதன்படி முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே கொலை குற்றங்களை செய்து பெயிலில் வந்தவர்களை தேடி கண்டுபிடிப்பது, கூலிப்படையை உளவு ரிப்போர்ட்கள் மூலம் கண்டுபிடித்து கைது செய்வது, கைதான ரவுடிகள் மூலம் மற்ற தலைமறைவான ரவுடிகளின் தகவல்களை அறிந்து கொண்டு அவர்களை கைது செய்வது என்று போலீஸ் தரப்பு வேகம் காட்டி வருகிறது.

ஸ்டார்மிங் ஆபரேஷன்
சென்னை மட்டுமின்றி மதுரை, கோவை, நெல்லை என்று பெரிய மாவட்டங்கள் அனைத்திலும் இந்த ரெய்டு நடந்து வருகிறது. முக்கியமாக தென் மாவட்டங்களில் அதிக அளவில் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில், முக்கியமாக நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இப்படி பழிவாங்கும் கொலைகள் நடப்பது வழக்கம். ஒரு குழுவை இன்னொரு குழு தாக்குவது. பழிக்கு பழி கொலை செய்வது அதிகம் நடக்கும். இதனால் அங்கு அதிக அளவில் சோதனைகள் நடந்து வருகின்றன.

21,592 ரவுடிகள்
முறையான திட்டமிடல், உளவு தகவல், இன்பார்மர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஆப்ரேஷன் நடக்கிறது. இதனால் எளிதாக ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகிறார்கள். இந்த ஆபரேஷனில் 21,592 ரவுடிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில்தான் இதுவரை நடந்த ஆபரேஷனில் 3325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடரும் கைதுகள்
பெயிலில் தப்பி சென்ற 204 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெயில் வாங்கிவிட்டு அதன்பின் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடலாம் வெளி மாவட்டங்களுக்கு தப்பி சென்றவர்கள். அதேபோல் பல்வேறு வழக்குகளில் நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பித்த 900க்கும் அதிகமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 3 நாளில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆப்ரேஷன் இன்னும் ஒரு நாள் கூடுதலாக நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications