சென்னையில் 2 லட்சத்தை நெருங்கும் தெரு நாய்கள்! 6 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு! எந்த ஏரியாவில் அதிகம்?
சென்னை: தெருநாய்கள் பிரச்சினை சென்னையில் மிகப் பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. காலை, மாலை நேரங்களில் வெளியே செல்லும் போதே நாய்கள் கடிக்குமோ என்ற அச்சமே இருக்கிறது. இதற்கிடையே சென்னையில் மொத்தம் எத்தனை தெருநாய்கள் உள்ளன என்பது குறித்த தரவுகளைச் சென்னை மாநகராட்சி இப்போது வெளியிட்டுள்ளது.
சென்னைவாசிகள் தினசரி எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையாகத் தெருநாய்கள் உள்ளன. அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் வேலை முடித்துவிட்டுத் திரும்பும் போது ஒரு வழி செய்துவிடுகிறது.

குழந்தைகள், முதியவர்கள் என யாருமே தெருநாய்கள் தொல்லையில் இருந்து தப்ப முடிவதில்லை. துரத்தித் துரத்திக் கடித்துக் குதறுகின்றன. இதனால் சென்னைவாசிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
தெருநாய் பிரச்சினை: தெருநாய்கள் பிரச்சினையைச் சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சியும் நாய்கள் பிடித்து இனப்பெருக்கத்தைத் தடுக்க அறுவைச் சிகிச்சை செய்து வருகிறது. இருப்பினும், பிரச்சினை முழுமையாக முடிந்துவிடவில்லை. நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகப் பலரும் புகாரளித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி நாய்களை எண்ணும் பணிகளை நடத்தியது.
நாய்களை எண்ணும் பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நாய்கள் மொபைல்களில் போட்டோ எடுக்கப்பட்டு, அதன் தரவுகள் சரி பார்க்கப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த ரிப்போர்ட் கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவன இயக்குநர், சென்னை மேயா் பிரியாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
எத்தனை நாய்கள்: இந்த பணிகள் சமீபத்தில் தான் நிறைவடைந்த நிலையில், சென்னையில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை தெரிய வந்துள்ளது... சென்னையில் ஏதோ சில நூறு நாய்கள் இருக்கலாம் என நாம் நினைத்திருப்போம். ஆனால், உண்மையில் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைப் பார்த்தால் நமக்குத் தலையே சுற்றிவிடும். ஆம், சென்னையில் உள்ள தெரு நாய்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டிவிட்டதாம்.
கடந்த 2018ம் ஆண்டில் சென்னையில் சுமார் 57,366 தெருநாய்கள் இருந்துள்ளன. ஆனால், 6 ஆண்டுகளில் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துவிட்டது. சென்னை மாநகராட்சியின் புள்ளிவிவரப்படி நகரில் இப்போது சுமார் 1.81 லட்சம் நாய்கள் இருப்பதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம், வளசரவாக்கம், அண்ணாநகர், திரு.வி.க.நகர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எந்த பகுதியில் எவ்வளவு: குறிப்பாக அம்பத்தூர் மண்டலத்தில் அதிகபட்சமாக 23,980 தெருநாய்கள் இருந்துள்ளன. மறுபுறம் ஆலந்தூரில் குறைந்தபட்சமாக 4,875 நாய்கள் உள்ளன.. மேலும் ஆண் நாய்கள் 65 சதவிகிதம் இருக்கும் நிலையில், பெண் நாய்கள் 35 சதவிகிதம் உள்ளன. மேலும், சென்னையில் குட்டி நாய்கள் 20 சதவிகிதம் உள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.. 95 சதவிகித நாய்கள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நன்றாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில் 10,100 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அதில் 7,165 நாய்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்யப்பட்டுள்ளன. வட சென்னையில் 30 சதவீதத்துக்கும் குறைவான நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி நாய்களைக் கட்டுப்படுத்த இதுபோல நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதையும் தாண்டி சென்னையில் நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications