முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை: தவறான தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொண்டபோது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதையடுத்து பரிசோதனை செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்போலா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகின்றன. முதல்வர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள், வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் நேற்று முன்தினம் இணைந்தார். இந்த நிகழ்ச்சி தேனாம்பேட்டையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதன் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே ஸ்டாலினுக்கு அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு கள ஆய்வு பணிகளுக்காக அவர் தொடர்ந்து வெளி மாவட்டங்களுக்கு பயணம் செய்து வருகிறார். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நேற்று, இன்று கள ஆய்வு மேற்கொள்ளவிருந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலையில் வழக்கமான நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூன்று நாட்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கடந்த திங்கள்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கையில், "முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது அறிகுறிகளுக்கு ஏற்ப அவருக்கு தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சமூக வலைதளங்களில் முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், முதல்வர் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள், வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அப்போலோ மருத்துவமனையின் அளித்த அறிக்கையை தவிர முதல்வர் தொடர்பான தகவல்கள் எதுவும் உண்மை இல்லை என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications