"தொட" கூடாது.. ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை.. ஹைகோர்ட் வார்னிங்
திருநங்கைகளை தாக்கினால் கடும் நடவடிக்கை என கோர்ட் எச்சரித்துள்ளது
சென்னை: திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்திக்கு செல்வதற்கு முன்பு, சில வருடங்களுக்கு முன்பு நடந்த 2 முக்கிய செய்திகளை பார்க்கலாம்.. 2016-ல் சென்னையில் நடந்த சம்பவம் இது.
சூளைமேடு நமச்சிவாயபுரத்தை சேர்ந்தவர் திருநங்கை தாரா... இவர் வயிற்றுப் பிழைப்புக்காக பாலியல் தொழில் செய்து வந்தவர்.. இவர் ஒருநாள் காலை திடீரென பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்தார்... உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

டூவீலர்
விஷயம் இதுதான், தாராவின் டூவீலர, செல்போனை, பாண்டிபஜார் போலீஸார் ஏதோ ஒரு காரணத்துக்காக கைப்பற்றியுள்ளார்கள் போலும்.. அப்போது தாராவை போலீசார் தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். இதில் மனமுடைந்த தாரா, அங்கேயே பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.. அங்கே டியூட்டியில் இருந்த போலீஸார், தாராவைப் பார்த்து "செத்துப்போ" என்று சொன்னாராம்.. நெருப்பு பற்றிக் கொண்டு எரிந்தும் தாராவை அவர் காப்பாற்றவுமில்லையாம்.. ஒன்றுதிரண்ட திருநங்கைகள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு போராட்டமும் செய்தனர்.

மதுரை
இதையடுத்து மதுரையில் இன்னொரு சம்பவம் நடந்தது.. 2 பெண்கள் மதுரையை சேர்ந்தவர்கள்.. 2 பேருமே உயிருக்குயிரான நட்புடன் பழகினர்.. பிறகு அதுவே காதலாக மாறியது.. பிரிய மனமில்லாமல், சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர்... ஆனால், 2 வீட்டிலும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், 2 பேருமே மதுரையில் இருந்து வேலை தெடி சென்னை வந்துவிட்டனர். இதனிடையே, இருவரையும் காணவில்லை என்று பெற்றோர்கள் புகர் தந்தனர்..

விசாரணை
இது தொடர்பான வழக்கில், தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம் அதை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய,மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது.

பாலினம்
இந்த நிலையில், இந்த வழக்கு இன்றைய தினம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர், ஓரினச் சேர்க்கையாளர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும், அவர்களை துன்புறுத்த கூடாது எனவும் காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து காவலர்களுக்கு காவலர் பயிற்சி மையம் மூலமாக பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நீதிபதி
மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களையும் காவல்துறையினர் துன்புறுத்துவதாக நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.... இதையடுத்து,மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களை துன்புறுத்தக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் துன்புறுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் நடத்தை விதிகளில், புதிய விதியை கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

சமூக நலன்
மேலும், ஒடுக்கப்பட்டோர் நலனுக்கு பல சீர்திருத்தங்களை செய்து வரக்கூடிய மாநில அரசு ஒரு முன்னுதாரணமாக இருந்து, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் ஓரின சேர்க்கையாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முன்னேற சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்... ஊடகங்கள் இதுபோன்ற செய்தியை கையாளும்போது சுயகட்டுப்பாடுடனும்,வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்த நீதிபதி, இந்த விஷயத்தில் ஊடகத்தினர் விழிப்புடன் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்து, அக்டோபர் 4 ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications