திடீரென வெடித்த குண்டுகள்.. அனுமதி இல்லாமல் "கேப்டன் மில்லர்" ஷூட்டிங்? அமைச்சர் மதிவேந்தன் பரபர
சென்னை: 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு உரிய அனுமதி இல்லாமல் நடப்பதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இது குறித்து அமைச்சர் மதிவேந்தன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் தனுஷ்.. இவர் தமிழ் மட்டுமின்றி பல்வேறு பல்வேறு மொழிகளிலும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படமும் மிகப் பெரியளவில் ஹிட் அடித்தது.
இவர் அடுத்து 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கேப்டன் மில்லர்: இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாகப் பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார்.. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாகத் தீவிரமாக நடந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நேற்று குண்டுவெடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டது.. திடீர் திடீரென குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டதால்.. சத்தம் கேட்டதால் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இந்தச் சூழலில் படப்பிடிப்பிற்கு உரிய அனுமதி உள்ளதா மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினர். அதில் வனத்துறையிடம் உரிய அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை நடத்த மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் நேற்று உத்தரவிட்டார். இதனிடையே மீண்டும் இன்று கேப்டன் மில்லர் படப்பிடிப்பு அதே இடத்தில் தொடங்கி நடந்ததால் பரபரப்பு கிளம்பியது.
அமைச்சர் மதிவேந்தன்: இந்தச் சூழலில் இது குறித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விளக்கமளித்துள்ளார். கேப்டன் மில்லர் ஷூட்டிங் குறித்து அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில், "வனப்பகுதிகளில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றால் எப்போதும் அனுமதி கோரி விண்ணப்பிப்பார்கள். நாங்கள் உரியத் தகவல்களைக் கேட்டு பரிசீலனை செய்தே விண்ணப்பத்திற்கு அனுமதி அளிப்போம். எந்த தேதிகளில் எடுக்க வேண்டும்.. எந்த நேரத்தில் எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் விளக்கிக் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஷூட்டிங் செய்ய அனுமதி அளிப்பார்கள்.
ஆனால், இப்போது அனுமதி இல்லாமல் ஷூட்டிங் நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். மேலும், அனுமதி இல்லாமல் வெடிகுண்டு வைப்பதாகவும் புகார்கள் வந்துள்ளது. இது குறித்தும் உரிய விசாரணை நடத்தப்படும். வனப்பகுதிகளில் அனுமதி இல்லாமல் ஷூட்டிங் நடத்தத் தமிழக அரசோ வனத்துறையோ நிச்சயம் உறுதுணையாக இருக்காது.

இது மட்டுமின்றி அனுமதி அளிக்கப்பட்ட போது நாங்கள் கொடுத்த அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றியுள்ளனரா என்பது குறித்தும் விசாரிக்க உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார். காட்டு தீ அடிக்கடி ஏற்படும் நிலையில், வெடிகுண்டு காட்சிகள் படமாக்கப்படுவதாகக் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "துறை ரீதியாக விசாரிக்க உள்ளோம். யார் மீது தவறு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து. அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
உரிய நடவடிக்கை: ஆக்கிரப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மதிவேந்தன், "வனத்துறையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆக்கிரமிப்புகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்ட விரோத ஆக்கிரமிப்புகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications