"பணக்காரர்கள் நாய்களை வளர்க்கிறார்கள்.." சென்னையில் உயரும் நாய் கடி சம்பவங்கள்! அமைச்சர் நேரு பேச்சு
சென்னை: தலைநகர் சென்னையில் நாய்கள் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே நாய் கடி சம்பவங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே. என். நேரு சட்டசபையில் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் நாய் கடி சம்பவங்கள் கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த மே மாதம் 5 வயது சிறுமி ஒருவரை ராட்வீலர் ரக நாய்கள் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

அதேபோல சென்னை புழல் பகுதியில் வசித்து வந்த 12 வயது சிறுவனை இம்மாத தொடக்கத்தில் ராட்வீலர், பாக்ஸர் ஆகிய இரு நாய்கள் கடுமையாகத் தாக்கியுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் சென்னையில் தொடர் கதையாகியுள்ளது. இதைத் தடுக்க தமிழ்நாடு அரசு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாய் கடி சம்பவங்கள்: இதற்கிடையே இது தொடர்பாக அமைச்சர் கே என் நேரு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் பேசிய அவர், "தெரு நாய்கள் பிரச்சினை இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. கொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டுகள் இதை முறையாகக் கையாளாத காரணத்தால் இந்த பிரச்சினை வந்துள்ளது.
பணக்காரர்கள்: நிறையப் பணக்காரர்கள் நாய்களை வளர்க்கிறார்கள். அதைப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆணையரும் இது தொடர்பாகத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். தினமும் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். இருப்பினும், பார்க்கிற்கு அழைத்து வரும் போது அல்லது வாக்கிங் கூட்டி வரும் போது சில தவறுகள் நடந்துவிடுகிறது.
கண்காணிப்பு: இந்த விவகாரத்தில் 78 பயிற்சி பெற்ற அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து, மூன்று நாட்கள் கண்காணித்து.. அந்த நாய்களை மீண்டும் அதே இடத்தில் விடுவதே இவர்கள் பணி.. இந்த விவகாரத்தில் நாங்கள் அதிக கவனம் எடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி.. கூடுதலாக அதிகாரிகளை நியமித்து நாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாக்கும் பணியை அரசு தொடர்ந்து எடுக்கும்.
அதேபோல் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகளும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கிறது.. இதுபோல சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் முதல்முறை பிடிக்கப்பட்டால் உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை பிடிக்கப்பட்டால் உரிமையாளர்களுக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாகப் பிடிக்கப்பட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும். அதற்கான சட்டம் கொண்டு வரப்படும்" என்றார்.
நடவடிக்கைகள்: சென்னையில் இப்போது நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இதைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாகச் செல்ல பிராணிகளை வளர்ப்போர் அதைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கிங் அழைத்துச் செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications