"முதல்வர் போஸ்டர்".. அண்ணாமலை பிஏவிற்கு எதிராக "வலுவான" ஆதாரம்.. பின்னணியில் "பலர்".. போலீஸ் தகவல்!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பின்புலமாக இருப்பதாக தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் குறித்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 11ம் தேதி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த போஸ்டர்கள் ஊடகம் ஒன்றின் அட்டைப்படம் போல வடிவைமைக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் குறித்து வெளியாகாத ஒரு செய்தியை வெளியானது போல வடிவமைப்பு செய்து பல இடங்களில் போஸ்டர்களாக ஒட்டி இருந்தனர்.
இந்த போலி போஸ்டர் திமுகவினர் இடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இந்த போஸ்டர்களை திமுகவினர் ஆங்கங்கே கிழித்து எறிந்தனர்.

கைது
இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.எஸ்பிளனேடு போலீஸ் ஸ்டேஷன் சார்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் அங்கு சுவரொட்டியை ஒட்டியது பிலிப்ராஜ் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்து ஜனநாயக முன்னணியின் சென்னை மாநகரச் செயலாளர் சத்தியநாதன் என்பவர்தான் போஸ்டரை கொடுத்தார் என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அண்ணாமலை பிஏ
அவரும் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் சொல்லித்தான் இப்படி போஸ்டர்களை ஒட்டியதாக அவர்கள் வாக்குமூலம்கொடுத்தனர். இந்த விவகாரம் தெரிந்ததும் பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து நேற்று முதல்நாள் இரவு அவர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.

ஜாமீன்
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் வினோத் ராஜ் ஆஜராகி இந்த புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்தான் இந்த சுவரொட்டிகளுக்கு நிதி உதவி செய்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

வழக்கு
விசாரணையில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த விவகாரத்தில் பின்புலமாக உள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெர்வித்தார். இந்த விவகாரத்தில் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பின்புலமாக இருப்பதாக கருதப்படுகிறது என்று தமிழ்நாடு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications