தொட்டு தொட்டு பேசுவார்.. முத்தமிடுவார்.. "காம"ர்ஸ் வாத்தியார் மீது குவிந்த 500 புகார்கள்!
சென்னையில் மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது புகார் எழுப்பப்பட்டுள்ளது
சென்னை: பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனைத் தொடர்ந்து தற்போது ஆசிரியர் ஆனந்த் பாலியல் அத்துமீறல் புகாரில் சிக்கியுள்ளார். இவரை தற்போது பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்த ஆசிரியர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு இதுவரை 500க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளனவாம். இவர் மீதும் தற்போது போலீஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
ஆசிரியர் ஆனந்த்தும் பல வருடமாக மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். அவர்களை தேவையில்லாமல் தொட்டுத் தொட்டுப் பேசுவது, முத்தம் தருவது, அணைப்பது, மிரட்டுவது என்று அக்கிரமம் செய்துள்ளதாக புகார்கள் கூறுகின்றன.
பள்ளி நிர்வாகம்
இந்த புகார்களையெல்லாம் தொகுத்து பள்ளி நிர்வாகத்திற்கு அனுப்பிய பிறகுதான் ஆசிரியர் ஆனந்த்தை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் ஆனந்த்தை சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆனால் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று முன்னாள் மாணவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அவருக்கு எந்தப் பள்ளியிலும் வேலை தரக் கூடாது என்றும் அது காடடமாக கூறியுள்ளது.
அத்துமீறல்
இந்த ஆசிரியர் குறித்து முன்னாள் மாணவர் சங்கம் கூறுகையில், இவர் ஏற்கனவே ஒரு பள்ளியில் வேலை பார்த்தபோது அங்கு மாணவிகளிடம் தவறாக நடக்கப் போய்த்தான் டிஸ்மிஸ் ஆனார். தனது வகுப்பு மாணவிகளிடம் இவர் பல வருடமாகவே தவறாக நடந்து வந்துள்ளார். மாணவிகளை தனது மடியில் அமரச் சொல்லி கட்டாயப்படுத்துவார். கேட்டால் அப்பா மாதிரி என்று சொல்லுவார்... மேலும் அத்துமீறி முத்தமும் இடுவார்.
அக்கிரமம்
இவர் மீது முன்னாள் பள்ளி நிர்வாகம் ஒழுங்காக போலீஸ் புகார் கொடுத்து நடவடிக்கை எடுத்திருந்தால் இவர் இப்படி தொடர்ந்து அக்கிரமம் செய்திருக்க மாட்டார்.. அந்தப் பள்ளி நிர்வாகம் செய்த தவறால் இவர் தொடர்ந்து அயோக்கியத்தனம் செய்து வந்துள்ளார்.
மாணவிகள்
தனது அயோக்கியத்தனத்தை எதிர்த்து மாணவிகள் யாராவது எதிர்த்துப் பேசினால் அவர்களை பெயில் ஆக்கி விடுவேன் என்று மிரட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார் இவர். மேலும் தனக்குப் படியாத மாணவிகளை மற்றவர்கள் முன்பு அவமானப்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.. பல பேரை உடல் ரீதியாக இவர் அடிக்கவும் செய்துள்ளார். காது கொடுத்து கேட்க முடியாத சொற்களாலும் வசை பாடி வந்துள்ளார்.
ஆசிரியர்
வழக்கமாக வகுப்புகள் 7.30க்குத்தான் தொடங்கும். ஆனால் ஒரு மாணவியை மட்டும் காலை 7 மணிக்கே வரச் சொல்லியுள்ளார் இந்த ஆசிரியர். அந்த மாணவியும் எல்லோரும் வந்திருப்பார்கள் என்று நினைத்துப் போயுள்ளார். ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில் யாருமே வகுப்பில் இல்லை. ஆசிரியர் மட்டும்தான் இருந்துள்ளார். அதாவது இந்த மாணவியை மட்டும் அந்த ஆசிரியர் பொய் சொல்லி அழைத்துள்ளார்.
அத்துமீறல்
அப்போது அந்த மாணவியை முத்தமிடவும், அத்துமீறவும் இவர் முயன்றுள்ளார். அந்த அயோக்கியனிடமிருந்து மாணவி விடுபட்டு புகார் சொல்ல போனபோது, அதெல்லாம் பொய் என்று கூறி சமாளித்து தப்பி விட்டார். அந்த மாணவியை பிளஸ் ஒன்னில் பெயில் செய்து விட்டார்.
குமுறல்
அதேபோல சரியாக படிக்காத மாணவிகளை கோச்சிங் கிளாஸில் போடுவது இவரது வழக்கம். அந்த வகுப்புகள் இரவு 8 மணி வரை நடக்கும். அப்போதெல்லாம் பல மாணவிகளிடம் இவர் அத்துமீறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவரை கண்காணிக்கவும், தட்டிக் கேட்கவும் பள்ளி நிர்வாகத்தில் யாருமே கவனம் செலுத்தவில்லை. அது அவருக்கு வசதியாகப் போய் விட்டது. இப்படி பல்வேறு அதிர்ச்சி தரும் புகார்களை முன்னாள் மாணவர் சங்கம் அடுக்கியுள்ளது. வாத்தியார் வேலை பார்க்கச் சொன்னால் இவர்கள் செய்த வேலைகளைப் பார்த்தால் நெஞ்சு குமுறுகிறது.