அரசியல் அமைப்புகளில் மாணவர்கள் சேரக்கூடாதா? ஆளுநருக்கு எதிராக வரிந்து கட்டும் திமுக மாணவரணி!
சென்னை: அரசியல் அமைப்புகளில் மாணவர்கள் சேரக்கூடாதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள திமுக மாணவரணி, ஆளுநர் ரவிக்கு எதிராக வரிந்துக் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளது.
மாணவர்களிடம் எந்தவொரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட மாட்டேன் என்றும், எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட மாட்டேன் எனவும் உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர வேண்டுமென்று சென்னை பல்கலைக்கழகம் கேட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக மாணவர் அணி விடுத்துள்ள பதிவு வருமாறு;
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடமிருந்து, எந்தவொரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட மாட்டேன் என்றும், எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர வேண்டுமென்று பல்கலைக்கழகம் கேட்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
மேலும், மாணவர்கள் இந்த விதிமுறைகளை மீறினால், துறையின் தலைவரால், உடனே மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கப்படுவர் என்று அப்படிவத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
பல்கலைக் கழகங்கள், பாடங்களை மட்டும் கற்றுக் கொடுக்கும் பயிற்சி கூடங்களாக மட்டும் இல்லாமல் சமூக நடத்தை, சமூக பொறுப்பு, அரசியல் புரிதல், பொது அறிவு சார்ந்த கல்வி, அடிப்படை சட்ட உரிமையை பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்டவைக்கான பயிற்சி பாசறையாக விளங்கிட வேண்டும்.
இளம் வயதில், அடக்கப்படும் நியாயமான உணர்வுகள், பல்வேறு வடிவங்களில், பிற்காலங்களில் வெளிப்படலாம் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை, உரிமைகளை பற்றி நிர்வாகத்திடம் உரையாடவும், கருத்துகள் தெரிவிக்கவும், ஜனநாயக வழிமுறையை பின்பற்றி போராடிடவும் உரிமைக் கொண்டவர்கள் என உணர வழிவகுக்க வேண்டும்.
இச்சூழல் இல்லாமல், அடக்கப்பட்ட மனநிலையில், மறுக்கப்பட்ட உணர்வோடு வெளிவரும் இளம் தலைமுறையினர், பிற்காலங்களில் சமூகத்திடமோ அல்லது அரசிடமோ உரையாடி விவாதிக்க தெரியாதவர்களாக ஜனநாயக முறைப்படி போராடத் தெரியாதவர்களாக, உரிமையற்றவர்களாய் இருந்திடச் செய்யும். மாறாக, அடக்கி வைக்கப்பட்ட எரிமலையின் குழம்பைப் போல, முறையற்ற போராட்ட கலவரங்கள் ஏற்பட காரணமாக இளம்தலைமுறையினர் தள்ளப்படுகிறார்கள்.
இந்தியா எனும் மாபெரும் ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமைகளை அறிந்தவர்களாய், புரிந்தவர்களாய் நியாயமான முறையில், ஜனநாயக வழிமுறைகளை கடைபிடித்து கேட்டுப் பெறக்கூடிய நிலையை இளைய தலைமுறையினருக்கு வழங்க வேண்டிய கடமை பல்கலைக்கழகங்களுக்கு உண்டு.
ஆனால், தற்போது இந்தியா முழுவதும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து மாணவர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் சூழ்ச்சியை பல்வேறு வகையில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்கள் பின்பற்றி வருகின்றன. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றிருந்தும், மாணவர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து எந்த போராட்டமும் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.
மாணவர் விரோத, மக்கள் விரோத, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக ஒன்றிய அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் எதிர்க்கும் குடிமக்களாய், மாணவர்கள் உரையாடவோ, விவாதிக்கவோ, போராடவோ பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கவில்லை. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறையை கொண்டும், குண்டர்களை கொண்டும் தாக்குதல்கள் நடைபெறுவதை நாடறியும்.

இத்தகைய போக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இதுநாள் வரையில் இருந்தது இல்லை. ஆனால் தற்போது தமிழ்நாட்டின் ஆளுநர், பல்கலைக்கழகத்தின் அனைத்து செயல்பாட்டிலும் தலையிட தொடங்கி, தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை, சமூகநீதி கொள்கை, மாணவர் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஆகியவற்றிற்கு எதிராக, திராவிட மண் ஏற்றுக் கொள்ளாத தேசிய கல்விக் கொள்கையையும், சனாதன சித்தாந்தங்களையும், கல்வி முறையையும், கொள்கைகளையும் தமிழ்நாட்டில் புகுதித்திடும் பெரும் முயற்சியில் பல்கலைக் கழகத்திற்கெல்லாம் கட்டளையிட்டு, மாணவர் நலனில் கிஞ்சிற்றும் அக்கறையின்றி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
தற்போது, அதன் நீட்சியாக மாணவர்களிடம் போராட்டங்களில் பங்கேற்ற மாட்டேன், அரசியல் தொடர்புடைய அமைப்பு அல்லது எந்த அமைப்பிலும் இணைந்து செயல்பட மாட்டேன் என்று உறுதிமொழி படிவத்தில் தங்கள் பெற்றோருடன் இணைந்து கையெழுத்திட வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டபதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை பறிக்கும் எந்த உறுதிமொழியையும் மாணவர்களிடமிருந்து பல்கலைக்கழகங்கள் பெற முற்படக்கூடாது என்று தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications