மாதம் ரூ 7.500… பணம் அல்ல; நம்பிக்கை! முதல்வரை வாழ்த்தும் வருங்கால ஐஏஎஸ்-கள்!
சென்னை: சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு மாதம் 7.500 ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது. இந்த ஊக்கத் தொகை ஒருவருக்கு 10 மாதங்கள் வரை வழங்கப்படுகிறது. அதாவது ஐஏஎஸ் Prelims எழுத உள்ளவர்களுக்கு இந்தத் தொகை.
அடுத்து Mains எழுத இருப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயைத் தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை.

இந்தத் தொகையைக் கொண்டு ஏழை, எளிய மாணவர்கள் நிச்சயம் தங்களின் ஐஏஎஸ் கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அந்தளவுக்குப் பயனுள்ள திட்டமாக மாணவர்கள் மத்தியில் இத்திட்டம் மாறி இருக்கிறது.
இந்தத் திட்டத்தின் பயனாளிகள் பலரைச் சந்தித்துப் பேசினோம்.
சபரீஸ்வரன். இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டி என்கிற கிராமத்திலிருந்து சென்னைக்கு ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராவதற்காகப் படிக்க வந்துள்ளார். "எங்க அப்பா ஒரு நெசவுத்தொழிலாளி. வீட்டில் தறி வைத்துள்ளோம். அதன்மூலம் வரும் வருமானம்தான் வீட்டைக் காப்பாற்றி வருகிறது.

என் சின்ன வயதில் எங்கள் மாவட்டத்திற்கு உ.சகாயம்தான் கலெக்டர் ஆக இருந்தார். அவர் எங்கள் ஊருக்கு ஏழை எளிய மக்கள் சார்ந்த நலத்திட்டங்களைத் தருவதற்காக ஒரு விழாவிற்கு வந்திருந்தார்.
அப்போதுதான் ஒரு கலெக்டர் பணி என்ன என்பதையும் அவர் அதிகாரம் என்ன என்பதையும் நான் நேரில் பார்த்தேன். அப்போது ஏற்பட்ட கனவு. அன்று முதல் நாமும் கலெக்டர் ஆகவேண்டும் எனத் தீர்மானித்தேன்.
அதன்பிறகு 3 ஆண்டுகள் இதற்காகக் கடுமையாக உழைத்தேன். ஆனால் தேர்வு முடிவுகள் சரியான வரவில்லை. அதன் பிறகு 4வது முயற்சியில்தான் Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.

அதன்பிறகு Mains எழுதினேன். இந்த மூன்று ஆண்டுக்காலத்தில் குறிப்பிட்ட காலம் வரை குடும்பத்தால் எனக்குப் பொருளாதார ரீதியில் உதவ முடிந்தது. அதன்பிறகு அவர்களால் முடியவில்லை.
அந்த நேரத்தில்தான் 'நான் முதல்வன்' திட்டம் எனக்கு உதவியது. எனக்கு அதன்மூலம் Mains எழுத 25 ஆயிரம் ஊக்கத்தொகை கொடுத்தார்கள். அப்போது அந்த உதவி எனக்கு மாபெரும் உதவியாக இருந்தது.
அது இல்லை என்றால் என்னால், அடுத்த கட்டத்திற்கு நகரவே முடிந்திருக்காது. குடும்பமே பணம் கொடுக்க நிறுத்திக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டபோது, முதல்வர் ஸ்டாலின் ஐயாவின் இந்தத் திட்டம்தான் மிக உதவிக்கரமாக இருந்தது" என்கிறார்

அடுத்த பயனாளி உதய பாரதி. இவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் என்ன சொல்கிறார்? "எனக்குச் சின்ன வயதிலிருந்தே டாக்டர் ஆகவேண்டும் என்பதுதான் கனவு.
நான் +2 முடித்த காலத்தில்தான் 'நீட்' தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. எனக்குச் சரியாக விண்ணப்பத் தேதி தெரியவில்லை. நான் சரியான கட் ஆப் எடுத்தும் மருத்துவ படிப்பில் சேரமுடியாமல் போனது.
வீட்டில் சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தேன். அப்போது வீட்டில் அதிகமாக உற்சாகம் அளித்தார்கள். சிவில் சர்வீஸ் பற்றி விளக்கினார்கள். அதில் நாம் அதிகம் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை அளித்தார்கள்.

அதன்பிறகுதான் எனது கனவு மாறியது. அதன்பிறகு சிவில் சர்வீஸ் எழுத முடிவு செய்தேன். அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து முடிந்தபிறகு 2021இல் சிவில் சர்வீஸ் எழுத ஆரம்பித்தேன்.
எனது முதல் முயற்சி தோல்வியானது. முதல் முறை தேர்வு எழுதும் போது வீட்டில் பொருளாதாரரீதியாக எதைக் கேட்டாலும் செய்வார்கள். கோட்சிங் கிளாஸ் போகவேண்டுமா? அல்லது நிறையப் புத்தகங்கள் வாங்க வேண்டுமா? எதைக் கேட்டாலும் உடனே செய்வார்கள். தேர்வில் தோல்வி என வந்ததும் பின்வாங்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படித்தான் எனக்கும் நடந்தது.
அதன்பிறகு என்ன செய்வது? இந்தத் தடைகளை எப்படித் தாண்டுவது என யோசித்தபோதுதான், 'நான் முதல்வன்' திட்டம் எனக்கு மிகப் பெரிய கிஃப்ட் ஆகக் கிடைத்தது. அந்தப் பொருளாதார பலத்தை அரசு எனக்குத் தரவில்லை என்றால், என்னால் தொடர்ந்து தேர்வுக்குத் தயாராக முடியாமல் போய் இருக்கும்" என்கிறார்

"2012 என்று நினைக்கிறேன். முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்து நடந்தது. அதில் சிக்கிக் குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர். அப்போது நாங்கள் மாணவர்கள் எல்லோரும் சென்று அங்கே உள்ள மக்களுக்குப் பல உதவிகளைச் செய்து வந்தோம்.
அப்போது அந்த மாவட்டத்தின் கலெக்டர் வந்தார். பார்வையிட்டார். உடனடியாக விபத்தில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்டங்களை அறிவித்தார். குறைந்தது 6 மாதத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்கும் ஆணை வழங்கப்பட்டது. அப்போதுதான் எனக்கு கலெக்டர் என்ற பணியின் மீது ஆர்வம் வந்தது.
நாங்கள் மாணவர்கள் அனைவரும் கூடி, தெருத் தெருவாக அலைந்தோம். வீடு வீடாகப் போய் உதவிக்கேட்டோம். எங்களால் 1 லட்சம் தான் திரட்டமுடிந்தது. ஆனால், ஒரே கையெழுத்தில் கலெக்டர் ஒட்டுமொத்த குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றிவிட்டார்.

பொறியியல் படித்து முடித்ததும், 'நான் முதல்வன்' திட்டம் அறிமுகமானது. அதை முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுத் திட்டம் என்று இறையன்பு ஐஏஎஸ் பேசி இருந்தார். அது என்னைக் கவர்ந்தது. நாம் ஏன் இதற்கு முயற்சி செய்யக் கூடாது எனத் தோன்றியது.
மொத்தம் 10 மாதம் ஊக்கத்தொகை தருகிறார்கள். 75 ஆயிரம் தருகிறார்கள் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்தேன். எனக்கு இடம் கிடைத்தது.
சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான உதவி எப்போது கிடைக்கிறதோ அவன்தான் வெற்றியடைவான். அப்படித்தான் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் எனக்குக் கிடைத்த உதவியைப் பார்க்கிறேன்.

இனி வேலைக்கு ஆகாது என்ற நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினின் இந்த உதவித் திட்டம் எனக்குக் கிடைத்தது. இப்போது என் கனவை நான் மீண்டும் தொடங்கி இருக்கிறேன்" என்கிறார் இந்தக் கிராமத்து இளைஞர்.
அபினேஷ், "என் ஊர் முகையூர். இது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் பட்டதாரி. அப்பா ராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு, இப்போது விவசாயம் செய்து வருகிறார். 2018இல் கல்லூரி முடித்தேன். அரசுக் கல்லூரியில்தான் படித்தேன்.
என்னைப் போன்ற பின் தங்கிய கிராமத்திலிருந்து சிவில் சர்வீஸ் கனவுடன் வருபவர்கள் பலர் பொருளாதார நெருக்கடியால் தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் ஊருக்கே போய் விடுவார்கள். அப்படித்தான் என் நிலையும் இருந்தது. எனக்குக் கீழாக இரண்டு தங்கைகள்.

நான் தான் வீட்டில் மூத்தவன். பொறுப்புகள் அதிகம். சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த நேரத்தில் வீட்டில் உதவிக் கேட்க முடியாத நிலை. அப்போதுதான் எனக்கு இந்த 'நான் முதல்வன்' வாய்ப்பு கிடைத்தது.
எங்களைப் போன்ற குடும்ப பின்புலத்திலிருந்து வருபவர்களுக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு முதல்வர் இத்திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறார்.
மொத்தமாக 75 ஆயிரம் கொடுத்தால் அதை வேறு மாதிரி செலவு செய்துவிடுவார்கள். மாதா மாதம் 7,500 என்பது சிறப்பான உதவி. அதைக் கவனம் சிதறாமல் நாங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்" என்கிறார்
இவரைப்போலவே திருமணம் ஆன பெண் ஒருவர் இந்த 'நான் முதல்வன்' மூலம் Mains அளவுக்கு முன்னேறி இருக்கிறார். இவருக்குக் குழந்தைகள் கூட உள்ளது. அவர்களும் படித்துவருகிறார்கள்.
இவர் இன்னொரு பக்கம் தன் ஐஏஎஸ் கனவை நிறைவேற்றத் தொடர்ந்து போராடி வருகிறார். இவர் வீட்டை எதிர்பார்க்காமல் இந்தத் தேர்வில் ஈடுபட முதல்வர் ஸ்டாலின் அளித்துவரும் ஊக்கத்தொகையே முதல் காரணம் என்கிறார்.

அடுத்ததாகப் பேசிய இன்னொரு இளைஞர் 9 முறை தேர்வு எழுதி இருக்கிறார். அதனால் மனதளவிலும் பொருளாதார அளவிலும் சோர்ந்து இருந்த போது தனக்கு இந்த 'நான் முதல்வன்' திட்டம் மறு உயிர் கொடுத்திருக்கிறது என்கிறார்.
"எங்க அப்பா நான் +2 படிக்கும்போது புற்றுநோய் வந்து இறந்துவிட்டார். அதன்பிறகு என்னை வளர்த்துப் படிக்கவைத்து வருவது எல்லாமே என் அம்மாதான். ஆனால், நான் பட்டதாரியாக ஆன பிறகும் அவரை நான் நம்பி இருப்பது கஷ்டமாக இருக்கிறது.
நான் ஐஏஎஸ் தேர்வுக்காகப் படிக்கும்போது தேவையான செலவுகள் அனைத்திற்கும் அவர் கையை எதிர்பார்த்துக் காத்திருப்பது மனதிற்கு நெருடலாக இருந்தது. அந்த நேரத்தில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த உதவித்தொகையை அறிவித்தார்.
என்னைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய உதவியாக உள்ளது. அதைக் கொண்டு என் படிப்பு செலவை நானே பார்த்துக்கொள்கிறேன். முதல்வரின் இந்தத் திட்டத்தால் முழுமையாகப் பலன்பெற்று இருக்கிறேன்" என்கிறார் சென்னை மாணவர் ஒருவர்
மற்றொரு மாணவர் பேசும் போது, "இந்த 7.500 என்பது உதவித்தொகை இல்லை. இது நம்பிக்கை. கொரோனா ஊரடங்கு காலத்தில் நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுகொண்டிருந்த போது இந்த உதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
ஒரு தந்தையாக எங்கள் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு இதைச் செய்தார். ஆகவே, இதை நம்பிக்கையாகத்தான் பார்க்கிறேன். பணமாகப் பார்க்கவில்லை" என்கிறார்.












Click it and Unblock the Notifications