நானும் தாய்லாண்டில்தான்... சட்டென போனில் மடக்கிய கருணாநிதி.. சு. திருநாவுக்கரசர் சொன்ன சுவாரசியம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முத்திரை பதிக்காத துறையே இல்லை; தமிழில் ஆழ்ந்த புலமை; சமயோசிதமாக பேசும் திறன் கொண்டவர் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான லோக்சபா எம்.பி. சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜே. ரவீந்தரன் ஏற்பாட்டில் கருணாநிதி பிறந்த நாள் நிகழ்ச்சி இணையவழியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் பேசியதாவது:
இந்திய அளவில் கருணாநிதிக்கு சமமாக எந்த ஒரு தலைவரும் இல்லை. அனைத்து துறைகளிலுமே புகழ் கொடி நாட்டியவர். கருணாநிதி துலஙாத துறை என்று எதுவுமே இருந்ததும் இல்லை.
தோல்வியை சந்திக்காதவர்
தமிழக சட்டசபையில் 60 ஆண்டுகாலம் பணியாற்றியவர். எம்.எல்.ஏவாக, அமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, முதல்வராக பணிபுரிந்தவர். தேர்தல் வரலாற்றில் ஒருபோதும் தோல்வியையே தழுவாதவர் கருணாநிதி. மனம் திறந்து பாராட்டுவதில் கருணாநிதி வல்லவர். இதில் கஞ்சத்தனமே இல்லாதவர்.
கட்டுப்பாடுகளில் உறுதி
சமயோஜித அறிவு, பிரசென்ஸ்ப் ஆப் சென்ஸ், நினைவாற்றல், நேரந்தவறாமை ஆகியவற்றில் உறுதியாக இருந்தார். வயதான காலத்திலும் கூட நேரந்தவறாமையை கடைபிடித்தார். நான் தாமதமான போனால், நீங்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆள்; தாமதமாகத்தான் வருவீர்கள் என கிண்டலடிப்பார்.
தாய்லாண்ட் விவகாரம்
ஒருமுறை வெளிநாட்டில் இருந்தேன். அப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நான் வெளிநாட்டில் இருப்பது தெரிந்தும், எங்கய்யா இருக்கிற என்றார். நான் தாய்லாந்தில் இருக்கிறேன் என்றேன். உடனே நானும் தாய்லாண்டில் (தாய்நாடு)தான் இருக்கிறேன் என கமெண்ட் அடித்தார்.
நம்பிக்கை வைத்த கருணாநிதி
ஒரு மேடையில் 100 பேர் பேசினாலும் 50 பேர் கவிதை வாசித்தாலும் அதில் முதன்மையானவராக. பேசுபொருளாக இருப்பவர் கருணாநிதி மட்டும்தான். சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தும் பார்த்திருக்கிறேன்; எம்ஜிஆர் காலத்திலும் பார்த்திருக்கிறேன்; ஜெயலலிதா காலத்திலும் பார்த்திருக்கிறேன் தனிக்கட்சி தொடங்கி கூட்டணியும் வைத்தேன். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 3-ஐ என் கட்சிக்கு நம்பிக்கையோடு கொடுத்தார் கருணாநிதி.
ஆறுதல் சொன்ன கருணாநிதி
இறுதி கால கட்டங்களில் அவரால் பேச்சே வரமுடியாத நிலையில் சந்தித்தேன். என்னை கட்டுப்படுத்த முடியாதல் அழுதேன். ஆனால் என் கைகளை தடவிக் கொடுத்து என்னைத்தான் அவர் ஆசுவாசப்படுத்தினார். அவரை ஜெயலலிதா அம்மையார் நள்ளிரவில் கைது செய்ததை தாங்கவே முடியாது. அப்போது மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை போய் பார்த்தோம். ஏதோ தமது வீட்டில் அமர்ந்திருப்பது போல இறுக்கமே இல்லாமல் இயல்பாகவே இருந்தார். இவ்வாறு சு. திருநாவுக்கரசர் பேசினார்.