அபாய கட்டத்தை நெருங்குகிறோம்.. தமிழக அரசே விரைந்து நடவடிக்கை எடு.. சு வெங்கடேசன் அலர்ட்!
சென்னை: மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி திறனில் அபாய கட்டத்தை நெருங்குகிறோம். எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது பேஸ்புக் பதிவில் மதுரை எம்பி சு வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வடஇந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆக்ஸிஜன் இருப்பு இருப்பதாக மாநில அரசு கூறுகிறது. இதுகுறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில் அபாயகட்டத்தை நெருங்குகிறோம்.
தமிழகத்தின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன். ஏப்ரல் மாத மத்தியில் நமது மருத்துவ பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக நமது தேவை 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

நடவடிக்கை
நாம் அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
தமிழக அரசே, விரைந்து நடவடிக்கைகளில் இறங்கு என தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார் வெங்கடேசன். அது போல் அவர் தனது மற்றொரு பதிவில் தமிழகத்தில் எங்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவை என்பது குறித்தும் ஒரு பதிவை போட்டுள்ளார்.

தருமபுரி
அதில் அவர் கூறுகையில் இது தான் நிலைமை, தமிழக அரசே விரைந்து செயல்படு. திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினசரி விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் அளவு 5 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. ஆனால் தினசரி தேவையோ 7 மெட்ரிக் டன். தருமபுரி மாவட்டத்துக்கு தினசரி ஒரு மெட்ரிக் டன் விநியோகம் இருக்கிறது ஆனால் தேவையோ தினசரி 3 மெட்ரிக்.

தேனி
நாமக்கல் மாவட்டத்துக்கு நாள்தோறும் 6 மெட் ரிக் டன் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் தேவையோ 10 மெட் ரிக் டன்னாக இருக்கிறது. திருச்சி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் 10 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தினசரி தேவையோ 5 மெட்ரிக் டன்.
தேனி மாவட்டத்துக்கு கடந்த ஒரு வாரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ள அளவு 5 மெட்ரிக் டன். ஆனால் தேவையோ ஒரு வாரத்துக்கு 15 மெட்ரிக் டன்.

எதிர்பார்ப்பு
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த நான்கு நாட்களாக விநியோகம் எதுவும் செய்யப்படவில்லை. தேவையோ தினசரி ஒரு மெட்ரிக் டன்னாக இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆக்சிஜன் தேவையின் அளவு தினசரி கூடிக்கொண்டிருக்கிறது, பற்றாக்குறையின் அளவும் வேகமாக கூடிக்கொண்டிருக்கிறது. அரசிடம் இப்பொழுது எதிர்பார்ப்பது கூடுதல் திட்டமிடலும், விரைவான செயல்பாடும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications