மதுராந்தகம் சார் பதிவாளருக்கு.. காலையிலேயே வாழ்க்கையே மாறப்போகுதுன்னு தெரியாது.. திருப்பம்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நேற்று நடந்த சம்பவம், சில அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் காரியங்களை முடிக்க முடியாது என்பதை உறுதி செய்வதாக இருக்கிறது. நேர்மையாக பணமே கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் வேலையை முடிக்க நினைத்தால் அவர்கள் முயற்சி அவ்வளவு விரைவில் நிறைவேறாது என்பதற்கு உதாரணமாக சம்பவங்கள் நடக்கின்றன. அப்படியான சம்பவம் மதுராந்தகத்தில் நடந்துள்ளது. மதுராந்தகம் சார் பதிவாளர் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஈசூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவர் 'சிவன்' என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை அந்த பகுதியில் நடத்தி வருகிறார். சிவராமன், தனது மனைவி கலா பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தில், 3 சென்ட் நிலத்தை அறப்பணி செய்யும் தனது தொண்டு நிறுவனத்திற்கு தானமாகப் பத்திரப்பதிவு செய்ய முடிவு செய்திருக்கிறார். இதற்காக மதுராந்தகத்தில் உள்ள அரசு அலுவலகத்திற்கு போன போது தான் லஞ்சம் கேட்டார்களாம்.

லஞ்சம் கேட்ட சார்பதிவாளர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சார்பதிவாளர் கார்த்திகேயன் என்பவரை சிவராமன் அணுகியபோது, பத்திரப்பதிவை முடிக்க சார் பதிவாளர் கார்த்திகேயன் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஒரு தொண்டு நிறுவனத்திற்கு தானமாகச் செய்யப்படும் பத்திரப்பதிவுக்கு, இவ்வளவு பெரிய தொகை லஞ்சமாகக் கேட்கப்பட்டதைக் கேட்டு சிவராமன் மனம் வருந்தினாராம். நீண்ட பேரத்திற்கு, லஞ்சத் தொகை ரூ.15 ஆயிரமாகக் குறைக்கப்பட்டு, அதில் முதல் தவணையாக ரூ.10 ஆயிரத்தை நேற்று கொடுப்பதாக முடிவானதாம்.
லஞ்சம் தர விரும்பவில்லை
ஆனால், தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சிவராமன், லஞ்சத்தை தருவதற்கு விரும்பவில்லை. துணிச்சலுடன் செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட போலீசார், வகுத்த திட்டப்படி சிவராமன் லஞ்சப் பணம் ரூ.10 ஆயிரத்தை சார்பதிவாளர் கார்த்திகேயனிடம் கொடுத்தாராம்.
சார் பதிவாளர் கைது
அப்போது அந்தப் பணத்தைப் பெற்ற சார் பதிவாளர் கார்த்திகேயன், அருகில் இருந்த பத்திர எழுத்தாளர் சிவாவிடம் அதைக் கொடுக்கும்படி பணித்தாராம். சிவா அந்தப் பணத்தைப் பெற்ற மறுகணம், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மின்னல் வேகத்தில் பாய்ந்து, பணத்தைப் பறிமுதல் செய்து சிவா மற்றும் சார் பதிவாளர் கார்த்திகேயன் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்
லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம்
தொண்டு நிறுவனத்திற்கு தானமாகப் தனது மனைவி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடிவு செய்த சிவராமனிடம் சார் பதிவாளர் 25000 லஞ்சம் கேட்டதாக கூறப்படும் சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து அவர் மற்றும் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மதுராந்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவராமனை போல் ஒவ்வொருவரும் லஞ்சம் தர மறுத்து, லஞ்சஒழிப்பு போலீசில் புகார் அளிக்க தொடங்கினால், லஞ்சம் வாங்குவதை பல அதிகாரிகள் நினைத்தே பார்க்க மாட்டார்கள்
பழிவாங்கவும் புகார்கள் தரப்படுகிறது
அதேநேரம் அரசு ஊழியர்கள் சிலரை பழிவாங்கும் நோக்குடன் லஞ்ச பணத்தை வேண்டுமென்றே கொடுத்து சிக்க வைக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கிறது. லஞ்சமே கேட்டிருக்க மாட்டார். ஆனால் லஞ்சம் கேட்டதாக பொய்யாக புகார் அளித்து, லஞ்ச புகாரை தந்து சிக்க வைக்கும் சம்பவங்களும் நடக்கிறது.அதனால் தான் லஞ்சம் வாங்கி கைதாகும் அதிகாரிகள் விஷயத்தை அரசு மிகவும் கவனமாக கையாள்கிறது. அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் முன்பு (வழக்கு தொடர அனுமதிக்கும் முன்பும்), முழுமையாக நடந்தது என்ன என்பதை கவனிக்கிறது. அது சில லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு சாதகமாகவும் இருக்கிறது. அதுவே இன்றைக்கும் லஞ்சத்தை ஒழிப்பதற்கு சவாலாகவும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications