சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து.. பதறியடித்த பயணிகள்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. 12 பெட்டிகள் கொண்ட ரயிலின் 9வது பெட்டி மட்டும் தடம்புரண்டது. இதனால் பயணிகள் பதறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். எனினும் இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அந்த ஒரு பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு தண்டவாளத்தில் நிறுத்தும் பணி நடந்து வருகிறது.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்த மின்சார ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

தடம்புரண்டு விபத்து
12 பெட்டிகள் கொண்ட ரயிலின் 9 வது பெட்டியில் இரண்டு ஜோடி சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகிச் சென்றன. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 11 மணியளவில் ஆவடி நோக்கி இந்த ரயில் தடம் புரண்டுள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது. தடம் புரண்டதும் ரயில் குலுங்கியதால், பெட்டியில் இருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர்.
பெரும் விபத்து தவிர்ப்பு
இதையடுத்து, லோகோ பைலட் சுதாகரித்துக்கொண்டு உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர், தடம் புரண்ட பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினர். இந்த விபத்தில் பயணிகள் யாரும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. ரயில் 15 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக, என்ஜின் டிரைவர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடம் புரண்ட ரயில் பெட்டியை ஆய்வு செய்தனர். ரயில் தடம் புரண்டதால் ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
ரயில்வே அதிகாரிகள் விளக்கம்
தடம் புரண்ட பெட்டிகளை சரி செய்யும் பணிகள் முழு வீச்சில் அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். பிற்பகல் 1.20 மணியளவில் தடம் புரண்ட பெட்டிகளை சரி செய்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரயில் பிற்பகல் 2 மணியளவில் இருந்து ராயபுரம் பணிமணைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ரயில்கள் வேறு வழியில் இயக்கப்பட்டன.
இதனால் ரயில் சேவை பெரிதாக பாதிக்கப்பட்டவில்லை என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
வெயிலின் தாக்கத்தால் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில் தடம் புரண்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. எனினும், ரயில் தடம் புரண்டது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பயணிகள் கோரிக்கை
சென்னையில் பயணிகளுடன் சென்ற மின்சார ரயில் தடம் புரண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பல லட்சக்கணக்கான பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் தண்டாவளத்தை முறையாக பாராமரித்து இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகள் நடக்காமல் பராமரிக்க வேண்டும் என்பது பயணிகள் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற இந்த விபத்து காலை அல்லது மாலை நேரங்களில் ஏற்பட்டு இருந்தால் கடும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் பயணிகள் பேசிக்கொண்டதை பார்க்க முடிந்தது.












Click it and Unblock the Notifications