'தாடி வைக்காத பெரியார் தான் நம்ம முதல்வர் ஸ்டாலின்..' பாராட்டித் தள்ளிய சுப வீரபாண்டியன்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்குள் தாடியில்லாத பெரியார் இருப்பதாகவும் அவர், பெரியாரின் கருத்துகளை யாருக்கும் வலிக்காமல் மிகவும் மென்மையாக மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் என்றும் சமூகநீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
திமுகவின் நீண்ட காலத்திற்குப் பொதுச்செயலாளராக இருந்தவர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகன். இவரது நூற்றாண்டு தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் காலை 5 மணிவரை.. வண்டியோடு வெளியே வராதீர்கள்.. அதிரடி உத்தரவு
இதையொட்டி கடந்த டிச.19ஆம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலகத்துக்கு 'பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை' எனப் பெயர் சூட்டப்பட்டது.
அன்பழகன் நூற்றாண்டு விழா
இவரது நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கம் செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அமைச்சர் தா.மோ அன்பரசன்
இந்த சிறப்புக் கூட்டத்தை திமுக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும் குறு சிறு தொழில் துறை அமைச்சருமான தா.மோ அன்பரசன் தலைமை தாங்கினார். இந்த நூற்றாண்டு விழா கருத்தரங்கில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன், "திமுகவில் செயல் தலைவர் பதவியை உருவாக்கியவர் பேராசிரியர் அன்பழகன். பல்வேறு காலகட்டங்களில் திறன்பட கட்சி பணியினை மேற்கொண்ட திமுகவின் முன்னோடி" என்று பேசினார்.
தாடியில்லா பெரியார்
அதன் பின்னர் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் பேசும்போது, "பேராசிரியர் அன்பழகன் அவரது பேச்சுத் திறமையால், எழுத்து திறமையால், நேர்மையால், கொள்கைப் பற்றால் என்றென்றும் வாழ்வார். சமூகநீதி நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் வரையறைகளை என்னிடம் தந்தார்கள். அதைப் படித்து பார்த்தேன். அப்போது தான் முதல்வர் ஸ்டாலினுக்குள் தாடியில்லாத பெரியார் இருப்பது புரிந்தது.
மென்மையாக எடுத்துச் செல்கிறார்
பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள் என்று மட்டும் சொல்லாமல் அந்நாளைச் சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டு, அன்று அரசுப் பணியாளர்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காமல் அனைவரும் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு வந்து கைகளை நீட்டி சமூக நீதிக்காகப் பாடுபடுவேன் என உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்தார். இது சிறப்பான விஷயம். முதல்வர் ஸ்டாலின் பெரியாரின் கருத்துகளை யாருக்கும் வலிக்காமல் மிகவும் மென்மையாக மக்களிடம் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்" என்று அவர் குறிப்பிட்டார்.
கண்காணிப்புக்
சமூகநீதி என்பது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் சமூகநீதி கண்காணிப்புக் குழுவைக் கடந்த அக்டோபர் மாதம் பல்வேறு துறைசார்ந்த அமைக்கப்பட்டது. பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள் கொண்ட இந்தக் குழுவின் தலைவராகப் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் நியமிக்கப்பட்டார்.