சுபஸ்ரீ பெற்றோருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவு.. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி.!
சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்து பலியான சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து அந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சுபஸ்ரீயின் பெற்றோர், தங்கள் மகள் உயிரிழந்த விவகாரத்தில் பக்கபலமாக நின்று சட்டரீதியாக பிரச்சினையை வெளிக்கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு 12.9.19 அன்று வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க.வினர் திருமண வரவேற்பு நிகழ்வுக்காகச் சாலையின் நடுவே வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் சுபஸ்ரீ பலியானார். இதற்குக் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, தி.மு.க. சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து சுபஸ்ரீயின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, காவல் துறை மீது சட்டத்தை முறையாகச் செயல்படுத்தாதது தொடர்பாகவும், நிவாரணம் வழங்கக் கோரியும் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் தற்போது தீர்வு எட்டப்பட்டு 20 லட்ச ரூபாய் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுபஸ்ரீ மரணத்தைத் தமிழகம் முழுவதும் வெளிக்கொண்டு வந்து - சட்டரீதியாகத் துணை நின்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சுபஸ்ரீயின் பெற்றோர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.












Click it and Unblock the Notifications