கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா? ரேசன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்! அரிசி கார்டுகளாகும் சர்க்கரை கார்டு
சென்னை: தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், குறிப்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு போன்ற உதவிகள், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், சக்கரை அட்டை வைத்துள்ளவர்கள் இந்த சலுகைகளைப் பெற முடியாமல் தவிப்பது தொடர்கிறது. இதன் காரணமாக, சக்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அதுதொடர்பாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாகக் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் மானிய விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேசன் கார்டு
மாநிலம் முழுவதும் மொத்தம் 2 கோடியே 27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், 2.23 கோடி அட்டைகள் அரிசி அட்டைகளாக உள்ளன. இந்த அரிசி அட்டைகள் மூலம் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதற்கு மாறாக, சுமார் 5 முதல் 6 லட்சம் குடும்ப அட்டைகள் சக்கரை அட்டையாகவும், சில அட்டைகள் எந்தப் பொருட்களும் வாங்கப்படாத நிலையில் உள்ளவையாகவும் இருக்கின்றன.
சக்கரை அட்டை
அரிசி அட்டைக்கு அரசின் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, இந்தாண்டு வழங்கப்பட்ட 3,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு, சக்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால், ஏற்கனவே சக்கரை அட்டை வைத்திருக்கும் பலரும், தங்களை அரிசி அட்டைக்கு மாற்றிக் கொள்ள முயற்சித்து வருகின்றனர். ஆனால், நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ அட்டை மாற்றம் செய்ய முடியாத நிலை நீடித்து வருவதால், அரசு தனியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்றம்
இந்த சூழ்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் இந்த விவகாரத்தை முன்வைத்தார். தகுதி உள்ளவர்களின் குடும்ப அட்டைகளை சக்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டையாக மாற்றித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் சக்கரபாணி
இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்தாண்டு தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், 2.23 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த உதவி கிடைக்காததன் காரணமாகவே அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் கூறினார். மேலும், உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும், தகுதி இருப்பின் சக்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்தார். இதன் மூலம் சர்க்கரை கார்டுகள் அரிசி கார்டுகள் ஆவதோடு, அரசின் நலத்திட்டங்கள் பலவும் அவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications