ஜில் ஜில் கூல் கூல்.. தமிழ்நாட்டில் வெப்பத்தை விரட்டிய மழை! சில மாவட்டங்களில் “ஆஃபராக” ஆலங்கட்டி மழை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து மக்களை மகிழ்வித்து இருக்கிறது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்கியது. குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதியில் இருந்து 100 டிகிரிக்கும் அதிகமாக பல மாவட்டங்களில் வெப்பம் பதிவானது. வெப்ப அலை காரணமாக மக்கள் சோர்வுடன் காணப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று நல்ல தகவலை மக்களுக்கு சொன்னது. அந்த அறிக்கையில், "தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களுக்கு மழை பெய்யும்.
மே 26 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 27 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 28 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல வரும் மே 29 மற்றும் மே 30ஆம் தேதிகளில் 30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்." என்று அறிவித்தது.
அதேபோல், சென்னையின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன.
அதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியிலும் ஆலங்கட்டி மழை பெய்தது. கரூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. கோடை மழை காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி நீடித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications