நெரிசலே இல்லாமல் 'ஜில்'லுன்னு பயணிக்கலாம்.. சென்னை டூ தென்காசி ரூட்.. மேலும் ஒரு சிறப்பு ரயில்
சென்னை: சென்னையில் இருந்து தென்காசி வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.
கோடை விடுமுறையில் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாவிற்கு அதிக அளவு பயணிகள் சென்று வருகிறார்கள். இதனால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இருந்தாலும் இந்த சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அலைமோதவே செய்கிறது.

குறிப்பாக செனனையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்ட பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் அதிக கட்டணம் கொடுத்து பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து தென்காசி வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:-
வண்டி எண் (06035) தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வரும் 16 ஆம் தேதியில் இருந்து ஜூன் 29 ஆம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும்.
தாம்பரத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருத்துவர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவல்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவுனீஸ்வரம், கொட்டரக்காரா, குண்டரா, கொல்லம் வழியாக கொச்சுவேலி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் கொச்சுவேலியில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். கொச்சுவேலியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரத்திற்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலானது (வண்டி எண்; 06036) வரும் 17 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயில் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 14 + 2 லக்கேஜ் பெட்டிகளுடன் இயக்கப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications