திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!
சென்னை: மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி முதல் முறையாக வீடியோ வெளியிட்டு ஒரு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார். புதிய நீதி கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: அன்பான உங்களுக்கு என் பணிவான வணக்கம்! இப்போது சமூகவலைதளத்திற்கு வந்துள்ளேன். இதுவரை சினிமாவில் ஒரு இயக்குநராக, தயாரிப்பாளராக, நடிகராக நிறைய படங்களில் உங்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறேன்.

இப்போது புதிய வாழ்க்கை ஒன்றை நான் ஆரம்பிக்கிறேன். முதல் முறையாக அரசியலுக்கு வந்துள்ளேன். மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நான் வேட்பாளராக நிற்கிறேன். இதுவரை எனக்கு சினிமாவில் மிகப் பெரிய ஆதரவும் வாழ்க்கையும் அளித்த நீங்கள், எனது இந்த புதிய முயற்சிக்கும் ஆதரவாக நின்று என்னை வெற்றியடைய செய்வீர்கள் என மனமார நம்புகிறேன்.
என்றென்றைக்கும் உங்கள் ஆதரவை வேண்டி உங்கள் சுந்தர் சி என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, தமமுக, புரட்சி பாரதம், உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
அதில் அதிமுக 167 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 இடங்களிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 இடங்களிலும், ஐஜேகே இரு இடங்களிலும் புதிய நீதி கட்சி 2 இடங்களிலும் புரட்சி பாரதம் ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.
இதில் புதிய நீதி கட்சிக்கு அதிமுக சார்பில் ஒரு தொகுதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதி பாஜக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியை புதிய நீதி கட்சிக்கு கொடுக்கிறது. எனவே ஒரு தொகுதியில் இரட்டை இலையிலும் மற்றொரு தொகுதியில் தாமரை சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடுகிறது.
அதில் அதிமுக சார்பில் அக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரை மத்தியில் இயக்குநர் சுந்தர்.சி.யை களமிறக்குவதாக சண்முகம் அறிவித்துள்ளார். சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
மதுரை மத்திய தொகுதியின் எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். மேலும் இந்த தொகுதி திமுகவின் கோட்டை என சொல்லலாம். இங்கு 6 முறை திமுக வென்றுள்ளது. ஒரு முறை அதிமுகவும், ஒரு முறை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிகவும் வென்றிருக்கிறது. இந்த தொகுதியில் சுந்தர் சி வெல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications