சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் இப்படி ஒரு ஏற்பாடா... அசர வைத்த தெற்கு ரயில்வே
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான வேப்பம்பட்டில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து, ரயில்களில் அடிப்பட்டு மக்கள் இறப்பதை தடுக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஏற்பாடு அந்த மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் கேட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்ட தற்காலிக ஏற்பாடு பற்றி இப்போது பார்ப்போம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு லோக்கல் ரயில் தான் முக்கியமான போக்குவரத்தாக உள்ளது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளூர், தாம்பரம், ஆவடி, வேப்பம்பட்டு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, அரக்கோணம் உள்ளிட்ட புறநகர் பகுதி மக்கள் வேலைக்காக சென்னைக்கு வர மின்சார ரயில் தான் பெரிதும் உதவியாக உள்ளது.

இதில் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடம் மிகவும் மெயினான வழித்தடம் ஆகும். இந்த வழித்தடத்தில் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் கேரளா, கோவை,பெங்களூருக்கு செல்கின்றன. வடமாநிலங்களுக்கும் ஏராளமான ரயில்கள் இந்த வழித்தடத்தில் செல்கின்றன.
இந்நிலையில் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில் பல்லாயிரம் மக்கள் தினசரி ரயில்களில் சென்னை வந்து செல்கிறார்கள். அவர்கள் ரயில் நிலையங்களில் தண்டவாளங்களை கடக்க மேம்பாலத்தை பயன்படுத்துவது இல்லை. சில இடங்களில் தண்டவாளங்களில் கடந்து பயணம் செய்து வருகிறார்கள்.
பெரும்பாலான புறநகர் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. வேப்பம்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க நடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடைமேம்பாலம் இல்லை.
திருவள்ளூரை அடுத்து உள்ள வேப்பம்பட்டு ரயில் நிலையம் மக்கள் அதிகம் பயன்படுத்தும் புறநகர் ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வரும் நிலை உள்ளது. இதனிடையே வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் சுரங்க நடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை உள்ளது. ஆனால் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரயில்வே துறைக்கு எதிராக மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனிடையே வேப்பம்பட்டு ரயில் நிலையத்தின் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே மற்றொரு புதிய ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த ஏற்பாடு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஏற்பாடு என்னவென்றால், வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயில் வரும்போதும் போகும்போதும் எச்சரிக்கும் விதமாக ஒலிபெருக்கி மூலம் ஒலி எழுப்பப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேப்பம்பட்டு ரயில் நிலையத்தை கடக்கும்போது எச்சரிக்கும் விதமாக ஒலி பெருக்கி மூலம் ஒலி எழுப்பப்படுகிறது. ரயில்கள் வரும்போது பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வண்ணம் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனிடையே தற்காலிக ஏற்பாடு போதாது, மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கண்டிப்பாக அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications