ரயிலில் டிக்கெட் புக்கிங் பண்றீங்களா? யாரும் உள்ளே வர முடியாது.. இதோ AI வந்தாச்சு! பயணிகள் மகிழ்ச்சி
சென்னை: ரயில்வேக்களில் ஆன்லைனில் டிக்கெட் ரிசர்வேஷன் செய்து கொள்ள வசதிகள் உள்ள நிலையில், பலருக்கும் எளிதாக டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை.. இதற்கு காரணம் இடைத்தரகர்கள்தான் என்ற குற்றச்சாட்டு வலம்வரும்நிலையில், தெற்கு ரயில்வே சில அதிரடிகளை கையில் எடுத்துள்ளது.
பண்டிகை காலம், தொடர் விடுமுறை காலங்களில், எப்போதுமே ரயில்களில் சீட் கிடைப்பதில்லை.. சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கினாலும்கூட, ரிசர்வேஷன் டிக்கெட்டுகள் சீக்கிரமாக விற்று தீர்ந்து விடுகின்றன.

ஆன்லைன் வசதி: ஆன்லைனில் டிக்கெட் ரிசர்வேஷன் செய்து கொள்ள வசதிகள் உள்ளது என்றாலும், பல இடங்களில் புரோக்கர்களின் ஆதிக்கமும் அதிகமாக உள்ளது.. அதிக அளவில் பயணச் சீட்டுகளை இந்த புரோக்கர்கள்தான் பதிவு செய்கிறார்களாம்..
இதுகுறித்து ஏராளமான புகார்கள் ஆன்லைனில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.. இவர்களே இணையதளத்திலும் அதிகளவில் பயணச்சீட்டு பதிவதாக புகார்களும் உள்ளன.. அதனால்தான், இந்த புகார்களின் உண்மைத் தன்மை அறிந்து, அதன்மீது தீவிர நடவடிக்கைகளை எடுக்க ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து முயற்சி எடுத்துவருகிறாரகள்.
இணையதளம்: ரயில்வே பாதுகாப்பு படை இணையதளங்களில் தீவிர கண்காணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.. காரணம், ரயில்வே சட்டம் பிரிவு 143-ன் படி அங்கீகாரம் இல்லாமல் பயணச் சீட்டு விற்பதும், பிரிவு 142(1)-இன் படி ரயில்வே ஊழியர் அல்லது அங்கீகாரம் பெற்ற முகவர் தவிர மற்றவர் பயணச் சீட்டு விற்பனையில் ஈடுபடுவதும் குற்றமாகும்..
அதேபோல, ரயில் நிலையங்களில் உள்ள பயணச் சீட்டு பதிவு மையங்கள், டிராவல் ஏஜென்சிகள், தனியார் இன்டர்நெட் சென்டர்களில் ரயில்வே பாதுகாப்பு படை தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தி வருகிறார்கள்.. ஒருவேளை தவறான வழியில் அதிகளவில் பயணச்சீட்டு பதிவு செய்பவர்களை கண்டறியப்பட்டால், அவர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு வளையம்: இவைகளை தவிர, ஸ்டேஷன்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலமாகவும், ரயில்வே பயணச்சீட்டு பதிவு இணையதளங்களை கண்காணிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றன.. சந்தேகத்திற்கிடமானவர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், மேலும் சில அதிரடிகளை தெற்கு ரயில்வே எடுத்துள்ளது.. அதன்படி, ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் முன்பதிவு பயண சீட்டுகள் விரைவாக விற்று தீர்ந்து விடுவதற்கு காரணமே, தரகர்கள் இடையில் புகுவதுதான் என்ற குற்றச்சாட்டு வலுவாகியிருப்பதால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரகர்கள் தலையீடு தடுக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
அடையாளம்: முக அடையாளம், கைரேகை சரிபார்த்தல், தரவுகளை தீவிரமாக ஆய்வு செய்ய கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்ற ரயில்வே பாதுகாப்பு படை ஆலோசித்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மோசடிகளை உடனுக்குடன் தடுக்கவே இந்த இயந்திர கற்றல் (Machine Learning) முறை பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ரயில்வேயின் இது போன்ற அதிரடிகளால், எந்தவித இடையூறுமின்றி ரயில் பயணத்தை அனுபவிக்க முடியும் என்று பொதுமக்களும் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications