திராவிடத்தை ஒழிப்போம் என்றது சரியா? காங்கிரஸை ஒழிப்போம் என்றது சரியா? பாஜக மீது பாயும் அம்புகள்
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் ஹாட் டாபிக். அவரது தலையைச் சீவ முதலில் 10 கோடி கொடுப்பதாகச் சொன்னவர்கள், இப்போது அதைவிட அதிகம் தருவதாகப் பேரம் பேசி வருகிறார்கள்.
இந்தச் சர்ச்சையை பாஜக ஒரு தேசிய பிரச்சினையாக மாற்ற முயன்று வருகிறது. ஆனால், இதை எல்லாம் மிக இயல்பாகக் கடந்து போகிறார் உதயநிதி. '10 கோடி எதற்கு? என் தலையைச் சீவ 10 ரூபாய் சீப்பு போதும்' என்று நகைச்சுவையாகப் பதிலடி தந்து வருகிறார்.

ஒரு காலத்தில், ராமர் பாலம் சர்ச்சை எழுந்தபோது, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, 'எந்தக் கல்லூரியில் ராமர் பொறியியல் படித்தார்?' என்று கேட்க, அவரது தலையை ஒரு சாமியார் சீவி விடுவேன் என்றார்.
அதற்கு மு.கருணாநிதி, 'என் தலையை நானே சீவி பல வருடங்கள் ஆகிவிட்டன' என்றார்.
இன்றைக்கு மீண்டும் காலம் உதயநிதி மூலம் திரும்பி இருக்கிறது. இந்தச் சர்ச்சையால் தங்களின் இளைஞரணி தலைவர் 'தேசிய தலைவராக மாறிவிட்டார்' எனப் பெருமிதத்தோடு கூறிவருகிறார்கள்.

சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்தியவர்களை விட்டுவிட்டு, மாநாட்டில் பேசிய உதயநிதி குறிவைக்கப்படுவது ஏன்? இந்தச் சனாதன சர்ச்சையை எப்படிப் புரிந்துகொள்வது? ஒரு கேள்வியைச் சிலரிடம் முன்வைத்தோம்.
முதலில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன், "புதியதாக உதயநிதி எதையும் பேசிவிடவில்லை. இதற்கு முன்னால் பலர் இதே கருத்தைப் பேசி உள்ளனர். கலைஞர் பேசி இருக்கிறார். ஸ்டாலின் பேசி இருக்கிறார். ஏன் திருமாவளவன் தொடர்ந்து பேசி வருகிறார். இதைத் தேர்தலுக்காகப் பெரிதுபடுத்துகிறார்கள். பாஜக எதையாவது பேசி மக்களைக் கவர வேண்டிய கஷ்ட காலத்தில் இருக்கிறது.

பாஜகவின் அடிப்படைக் கொள்கை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது. அதைப் பல காலமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஆட்சி முடியப் போகின்ற நேரத்தில் ஏன் குழு அமைக்கிறார்கள்? இதைப் பற்றிய விவாதத்தைக் கிளப்பிவிட்டு விட்டால், 7.50 லட்சம் கோடி ஊழலைப்பற்றிப் பேசாமல் இருப்பார்கள் எனக் கணக்குப் போகிறார்கள்.
பெரியார் அந்தக் காலத்தில் நாத்திகம் பேசினார். அவர்கள் எந்தக் காலத்திலாவது ஆத்திகக் கூட்டங்களில் பாம்புகளை விட்டாரா? அல்லது அவரது தொண்டர்கள் விட்டார்களா? ஆனால், இதே ஆத்திகர்கள் பெரியாரின் கூட்டத்திற்கு வந்து பாம்புகளை விட்டார்கள். என்னென்ன அட்டூழியங்களைச் செய்ய முடியுமோ அதைச் செய்து அதன் மூலம் வெற்றியடையப் பார்ப்பது அவர்களின் நிலைப்பாடு.

உதயநிதி Genocide என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இவர் அந்த வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. சனாதனம் என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினேன் என்று பதிலளித்திருக்கிறார். பலர் திராவிடத்தை ஒழிப்போம் என்று பேசுகிறார்கள். அப்படி என்றால் எங்களை எல்லாம் கொலை செய்யப் பார்க்கிறீர்கள் என்று நாம் சொன்னோமா?
சனாதனத்தை ஒழிப்போம் என்பதை ஒரு கொள்கை ரீதியாகப் பார்க்கிறோம். சனாதனத்திலும்கூட உதயநிதி எந்தக் கொள்கையை எதிர்க்கிறார் என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டார். பிறப்பால் வேற்றுமை காட்டும் சமநீதி இல்லாத ஒரு கொள்கையை ஒழிக்க வேண்டும் என்று அவர் சொல்லி இருக்கிறார். இதே கருத்தைத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.

பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாகுபாடு காட்டுகின்ற அனைவரையும் நமது நாட்டுச் சட்டத்தின்படி கைது செய்து சிறையிலடைக்கலாம். அதற்கு முழு உரிமை இருக்கிறது. ஆகவே உதயநிதி பேசியதில் ஒரு தவறும் இல்லை" என்கிறார்
பத்திரிகையாளர் என்.ராம், "சனாதன தர்மத்தைப் பற்றியும் ஜாதிக் கொடுமையைப் பற்றியும் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவரது முழுமையான பேச்சை நான் கேட்டேன். அதற்கு அவர் கொடுத்திருக்கும் விளக்கங்களையும் பார்த்தேன்.
சிலர் சனாதன தர்மம் என்பது வேறு, வர்ணாசிரமம் என்பது வேறு என்று விளக்கம் தருகிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் பிறப்பால் பார்க்கப்படும் பாகுபாட்டை ஆதரிக்கிறார்கள். ஏற்கின்றவர்கள். நடைமுறையில் அதைத்தான் நாம் பார்க்கிறோம்.

பாஜகவைச் சேர்ந்த அமித் மால்வியா என்பவர் பொய்யான ஒரு தகவலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதை இந்துக்களுக்கு எதிரான இனப்படுகொலை எனத் திரித்துக் கூறியுள்ளார். அவர் மீது வழக்கே போடலாம். இதைப் போன்ற ஒரு பொய்யைச் சொன்னதற்காக குற்றவியல் வழக்குத் தொடர வேண்டும்.
பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் சனாதன தர்மத்தைப் பற்றிப் பல முறை பேசி இருக்கிறார்கள். சனாதன தர்மத்திற்கும் வர்ணாசிரம தர்மத்திற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது.
இதைப் பற்றி அம்பேத்கர் எழுதி இருக்கிறார். ஜாதியை வேரோடு அழிக்க வேண்டும் என்கிறார். அதன் சிறு தடயம்கூட மிச்சம் இருக்கக் கூடாது என்கிறார் அவர். ஜாதிக் கொடுமையைச் சீர்திருத்தம் செய்ய முடியாது. அதை அடியோடு ஒழிக்க வேண்டும் என்கிறார்.

1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அம்பேத்கர் பேசிய கடைசி உரை மிகமிக முக்கியமானது. அவர், 'இந்தியச் சமுதாயத்தில் வேதனையை ஏற்படுத்தக் கூடிய இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. அது என்னவென்றால், சமுதாய ரீதியாக, பொருளாதார ரீதியாக இங்கே சமத்துவம் என்பது இல்லை. அதைப்போன்று சகோதரத்துவம் இல்லை.
ஒரு மனிதன் ஒரு ஓட்டு என்பதில் சமநிலை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எல்லா மனிதர்களும் சமம் என்ற நிலை இல்லை. அங்கே முரண்பாடுகள் நிலவுகின்றன. இது அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அபாயம்' என்று அவர் பேசி இருக்கிறார்
இதைத்தான் உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். இதைத் தைரியமாகச் சொன்னதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன்" என்கிறார்
பத்திரிகையாளர் ஜென்ராம், "உதயநிதி ஸ்டாலின் பேசும் போது 'இந்த மாநாட்டுக்குச் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று வைக்காமல் ஒழிப்பு மாநாடு என்று வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. அதற்கு என் வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுதான் அவர் பேசி இருக்கிறார்.

மனிதத்தன்மைக்கு எதிரான கொள்கைகள் என்று ஒன்று இருந்தால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் உதயநிதி பேச்சின் சாரம்சம். அதில் என்ன சிக்கல் என்ன இருக்கிறது? congress mukt bharat என்று பாஜக தொடர்ந்து சொல்லி வருகிறது.
அப்படி என்றால், காங்கிரஸ்காரர்களை ஒழிக்கப்போவதாக அவர் சொல்கிறார்கள் என்று நாம் அர்த்தம் கொள்ளலாமா? அதற்காக பாஜகவை யாராவது விமர்சித்திருக்கிறார்களா? அப்படிப் பேசினால், அது அப்பட்டமான திரிப்பு வாதம் இல்லையா?
ஆனால், இஸ்லாமியர்களைக் கொல்லுங்கள் என்று சிலர் பேசி இருக்கிறார்கள். அறைகூவல் விட்டும் வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அவர்கள்தான் இப்போது இந்துக்களை ஒழிக்கச் சொல்கிறார் உதயநிதி என்று அர்த்தம் கற்பிக்கிறார்கள். இது அடிப்படை அரசியல் நாகரிகம் அற்ற செயல்.
2023இல் மனித சமுகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை 2 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே ரிஷிகள் முனிவர்கள் தந்துவிட்டார்கள். அதைக் காலா காலத்திற்கும் மாற்றத் தேவை இல்லை என்று சொல்வதை யாராவது ஏற்க முடியுமா?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டபோது அதற்கு முன்னதாக இந்தியாவிலிருந்த எந்தச் சட்டங்களும் செல்லாது என்று சொன்னதற்குப் பிறகும் சனாதனம் இன்றைக்கும் பொருந்தும் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?. இது அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது இல்லையா?" என்கிறார்.












Click it and Unblock the Notifications