சோழிங்கநல்லூர் தவெக எம்எல்ஏ ஆதரவாளர்களின் செயல்.. ஆடிப்போன சென்னை மாநகராட்சி அதிகாரிகள்
சென்னை: சென்னை மாநகராட்சி 15 வது மண்டலக் குழு அலுவலகத்தில் சம்மந்தமே இல்லாமல் தவெக கட்சியினர் உள்ளே சென்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி அதிகாரம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அரசு அதிகாரிகள் போன்று மண்டலக் குழு கூட்டத்தில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு சோழிங்கநல்லூர் எம்எல்ஏ-வின் ஆதரவாளர்கள் அதிகாரம் செய்வதுபோன்று அந்த வீடியோவில் இருக்கிறது.
சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை மாநகராட்சி 15 வது மண்டலக் குழு அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த மாதாந்திர கூட்டத்தில் மண்டலக் குழு தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த சென்னை மாநகராட்சி அதிராதிகாரிகள் கலந்து கொள்வது வழக்கம்.

எந்த ஒரு அரசியல் கட்சியினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி இல்லாத நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ பி.சரவண மூர்த்தி கலந்து கொண்ட நிலையில் அவருடன் சேர்ந்து தவெக கட்சியினர் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் உள்ளே புகுந்து ரீல்ஸ் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் தவெக கட்சியை சேர்ந்த ஒருவர் மைக்கில் சோழிங்கநல்லூர் தொகுதி முழுவதும் உள்ள சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அரசு அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்களுக்குள் நடைபெறும் கூட்டத்தில் தவெகவினர் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் அனுமதியின்றி உள்ளே புகுந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு அதிகாரிகள் போன்று அதிகாரம் செய்தனர்.
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது என்றும் தவெகவினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ, ஆய்வுகளை மேற்கொள்ளவோ கூடாது என தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் அறிவுரை வழங்கி இருந்தார்.
ஆளும்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் அறிக்கை மூலம் கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் சோழிங்கநல்லூர் தவெக எம்எல்ஏ பி. சரவண மூர்த்தி அவருடைய ஆதரவாளர்களை மண்டலக் குழு கூட்டத்திற்குள் அழைத்து சென்றதும், அதிகாரிகள் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அதிகாரம் செய்ததும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் முகம் சுளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டிருந்த அறிவிப்பில், நம் கழகத்தின் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் மனசாட்சியுள்ள மக்களாட்சி
அமைந்துள்ளதை மக்கள் மனங்குளிர்ந்து வரவேற்று மகிழ்கின்றனர். இச்சூழலில் நமக்கான பொறுப்புணர்வு பலமடங்கு அதிகரித்துள்ளது. நமது கழகம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கமே மக்கள் சேவையை முழுவதுமாக மேற்கொள்ள வேண்டும் என்பதுதான்.
எனவே கழகத் தோழர்கள் மக்கள் சேவையில் பொறுப்புணர்வுடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை, அதை நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். அதே நேரத்தில் கழகத் தோழர்கள் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். நம் கழகத்திற்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சரான நம் வெற்றித் தலைவர் அவர்களின் நற்பெயருக்கும் எந்தவிதத்திலும் களங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வது நம் தலையாயக் கடமையாகும்.
எனவே நம் கழகத் தோழர்கள் மக்கள் நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். மாறாக மக்கள் பிரதிநிதிகள் அல்லாத நம் கழகத் தோழர்கள் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதும், ஆய்வுகள் மேற்கொள்வதும் அறவே கூடாது என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு கூறியிருந்தார்.














Click it and Unblock the Notifications