உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்க்கு பின்னடைவா? சசிகலா அளித்த ‘நறுக்’ பதில்!
அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை தனி நபர்கள் யாரும் முடிவெடுக்க முடியாது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை தனி நபர்கள் யாரும் முடிவெடுக்க முடியாது. கழக தொண்டர்களின் முடிவு தான் இறுதி முடிவு. உச்ச நீதிமன்ற தீர்ப்பு யாருக்கும் பின்னடைவு இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துள்ளதாக அவரது தரப்பு கூறி வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஓ பன்னீர்ல்செல்வத்திற்கு பெரும் அடியாக பார்க்கப்பட்டாலும் இன்னும் தங்களுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தீர்மானங்கள் குறித்து நீதிமன்றம் எதுவும் சொல்லாத காரணத்தால் சிவில் நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் தரப்பு கூறி வருகிறது.

சசிகலா பேச்சு
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு குறைந்தபாடில்லை. இந்த நிலையில், சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை தனி நபர்கள் யாரும் முடிவெடுக்க முடியாது. கழக தொண்டர்கள்தான் முடிவு தான் இறுதி முடிவு என்று கூறியுள்ளார். தனது பேட்டியில் சசிகலா மேலும் கூறியதாவது:- உச்ச நீதிமன்ற தீர்ப்பு 80 பக்க தீர்ப்பு... அதை என்னுடய வழக்கறிஞர்கள் பார்த்து வருகின்றனர். சரியான நடவடிக்கையை சரியான நேரத்தில் எடுப்போம். இந்த வழக்கை பொறுத்தவரை எனக்கு சம்பந்தம் இல்லை. மற்ற இருவர் போட்ட வழக்கு இது.

மக்களுக்கு நன்றாக தெரியும்
என்னுடைய வழக்கு சிவில் நீதிமன்றத்தில் உள்ளது. திமுகவை பொருத்தவரை ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிறது. என்னவெல்லாம் செய்வோம் என்று சொன்னார்களோ அது எதையுமே செயய்வில்லை. ஆமை வேகத்தில் அரசாங்கம் நடந்து கொண்டு வருகிறது. அது மக்களுக்கு நன்றாக தெரியும். இது இடைத்தேர்தல்தான் இதனால் ஆட்சி மாறுவதற்கு வாய்பு இல்லை. அதனால் பொதுத்தேர்தலில் தக்க பாடத்தை மக்கள் திமுக அரசிற்கு கொடுப்பார்கள்.

தனி நபர்கள் முடிவெடுக்க முடியாது
அதிமுக விவகாரத்தை பொறுத்தவரை தனி நபர்கள் யாரும் முடிவெடுக்க முடியாது. கழக தொண்டர்களின் முடிவு தான் இறுதி முடிவு. உச்ச நீதிமன்ற தீர்ப்பு யாருக்கும் பின்னடைவு இல்லை. என்னை பொருத்தவரைக்கும் யாரும் பின்னடைவாக நினைக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் இதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தொண்டரக்ள்தான். எனவே யாரும் பின்னடைவு என நினைக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து.

ஜெயலலிதா இருந்த போது
தமிழக அரசியலில் ஒன்றே ஒன்றுதான் நடந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் மிரட்டப்படுகின்றன. தொழில் நிறுவனங்களில் 20 சதவீதம் ஷேர் கொடுங்கள் இல்லையென்றால் தொழில் செய்ய முடியாது என்கிறார்கள். இந்த பிரச்சினைகள் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இங்கு கம்பெனிகள் வர பயப்படுகிறார்கள். ஜெயலலிதா இருந்த போது இருந்த சூழல் வேற..இப்போது இருக்கும் சூழல் வேற என வெளிநாடு கம்பெனிகள் வருவதற்கு யோசிக்கின்றன. ஜெயலலிதா இருந்த போது சென்னையை சுற்றி தொழில்கள் நிறைய வந்தன. திமுகவை பொருத்தவரை ஒவ்வொரு நிறுவனத்தையும் மூடி வருகிறது.

மக்களை நேரடியாக சந்திப்பேன்
இதனால், இளைஞர்கள் வேலையிழந்து வருகிறார்கள். இதுதான் இந்த அரசாங்கம் செய்த சாதனை என்பதை ஆணித்தரமாக சொல்வேன். நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. என்னுடைய சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்துள்ளேன். விரைவில் பயணத்தை தொடங்கி மக்களை நேரடியாக சந்திப்பேன். மக்களிடம் எடுத்துச்சொல்வேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைந்த அதிமுகவாக மாறும். நாங்கள் அமோகமாக வெற்றி பெறுவோம். மக்கள் எங்களை நம்பி வாக்களிப்பார்கள். நான் சொன்ன சொல் மாறமாட்டேன். இவ்வாறு சசிகலா பேசினார்.












Click it and Unblock the Notifications