"மருத்துவ காரணங்களுக்கு ஜாமீன் தர முடியாது!" செந்தில் பாலாஜி மனுவை டிஸ்மிஸ் செய்த சுப்ரீம் கோர்ட்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ காரணங்களுக்கு ஜாமீன் தர முடியாது என்று கூறி சுப்ரீம் கோர்ட் ஜாமீன் மறுத்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.

இதய பிரச்சினை இருந்த நிலையில், அவருக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டு அவர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவர் மீது 120க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜி: அமைச்சர் செந்தில் பாலாஜி இப்போது நீதிமன்ற காவலில் சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையே கடந்த 22ஆம் தேதியுடன் அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 22ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 11 ஆவது முறையாக அவருடைய நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு, வரும் டிச 4 வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரு முறை தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. உடல்நிலை காரணமாக ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்ட நிலையில், அது (அக்டோபர் 19) ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
சுப்ரீ்ம கோர்ட்: இந்த வழக்கு கடந்த நவ. 20ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் முகுல் ரோகத்கி ஆஜராகி செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இருப்பினும், அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,செந்தில் பாலாஜியின் உடல் நிலை ஆரம்பத்திலிருந்தது போல் தான் உள்ளது என்றும் ஜாமீன் வழங்கினால் அவர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.
வழக்கு விசாரணை: இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்தச் சூழலில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த மருத்துவ அறிக்கையை மேற்கோள்காட்டி வாதத்தைத் தொடங்கிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜி உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாகவும் வலிப்பு வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதால் ஜாமீன் தேவை என்று கோரிக்கை விடுத்தார்.
ஜாமீன் மறுப்பு: அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "மருத்துவ பரிசோதனை செய்தாகிவிட்டது.. மருத்துவ அறிக்கையில் தீவிர பாதிப்பால் உடனடி சிகிச்சை தேவை என எதுவும் குறிப்பிடப்படவில்லை" என்றனர். மேலும், மருத்துவ காரணங்களுக்காகச் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்ற நீதிபதிகள், தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும்" என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து, மனுவை உச்ச நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. மேலும், வழக்கமான ஜாமீன் மனுவாக கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications